மிதவாத இந்துத்துவா.. பாஜக வழியிலேயே சென்று பதிலடி கொடுக்க ரெடியாகும் மமதா பானர்ஜி!
டெல்லி: கிறிஸ்தவர்கள் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக கூட்டணியால் வெல்ல முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 21 மாநிலங்களில் அக்கட்சி கூட்டணி ஆட்சி அமைத்துள்ளளது. இதையெல்லாம் பார்த்த எதிர்க்கட்சிகள் பாஜக வழியிலேயே போய் அதற்கு முட்டுக்கட்டை போட ஆயத்தமாகி வருகின்றன.
அதன் ஒரு வழிமுறைதான், 'சாப்ட் இந்துத்துவா'. இந்தியாவிலுள்ள பெரும்பான்மை மக்கள் இந்து மதத்தை பின்பற்றுவோர் என்பதால், அவர்களையும் திருப்திப்படுத்தி அரசியல் செய்வதன் பெயரே 'மிதவாத இந்துத்துவா'.
அப்படியானால் பாஜக ஆதரவு அமைப்புகள் ஆதரிக்கும், தீவிர இந்துத்துவா என்றால் என்ன என்ற கேள்வி எழலாம்.
இந்துக்களை திருப்திப்படுத்துவது
இந்துக்களையும் திருப்திப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது, 'மிதவாத இந்துத்துவா' என்றால், இந்துக்களை மட்டுமே திருப்திப்படுத்துவதும், பிற மதத்தினரை தொல்லை செய்வதும்தான் தீவிர இந்துத்துவா. தீவிர இந்துத்துவா இதற்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியது. 'சாப்ட் இந்துத்துவா' ஒரு வரையறையோடு நிற்க கூடியது. 'மிதவாத இந்துத்துவா' என்ற பதமே சமீபகாலமாகத்தான் பேசு பொருளாகியுள்ளது. இதுவரை வலதுசாரி மற்றும் இடதுசாரி என்ற அளவோடு நின்றிருந்த விவாதங்கள், இப்போது, கமல்ஹாசனின் மய்யம் போல, இந்த 'மிதவாத இந்துத்துவா' என்ற 'மத மைய' அரசியல் பற்றியும் சுற்றிவர ஆரம்பித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் அரசியல்
இந்துக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கிறார்களோ என்ற ஐயம் எதிர்க்கட்சிகளுக்கு எழுந்துள்ளதால்தான் 'சாப்ட் இந்துத்துவா' என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளன காங்கிரசும், திரினாமுல் காங்கிரசும். இதில் கவனிக்க வேண்டியது, காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி. மமதாவின், திரிணாமுல் காங்கிரஸ், ராகுல் காந்தியின் காங்கிரஸ் இடத்தை நிரப்பி, தங்கள் தலைமையில் இந்தியாவிலுள்ள எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்க துடிப்பது. இரண்டுமே 'சாப்ட் இந்துத்துவா'வை கையில் எடுத்துள்ளதுதான் விஷயமே.
பிராமணர் மாநாடு
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், பிர்பம் மாவட்டத்தில் ஜனவரியில் நடத்தப்பட்ட பிராமணர் மற்றும் புரோகிதர் சம்மேளன் என்ற நிகழ்ச்சி இதற்கு ஒரு உதாரணம். இடதுசாரி ஆட்சியின்கீழ் நீண்ட காலம் இருந்த மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பகவத் கீதை, ராமகிருஷ்ண பரமகிருஷ்ணர் மற்றும் அவர் மனைவி சாரதா தேவி புகைப்படம், சால்வை ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
சோமநாதர் கோயிலில் ராகுல் காந்தி
குஜராத் சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார். அப்போதே மிதவாத இந்துத்துவா குறித்த பேச்சுக்கள் எழுந்தன. இன்று ராகுல் காந்தி வரிசையில் மமதா கட்சியும் இணைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ராம நவமி நாளான வரும் 25ம் தேதியன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத யாத்திரை என்பது, இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடையதாக பார்க்கப்படும் நிலையில், அதே வழியில் மமதாவும் யாத்திரையை ஆரம்பிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.