பேச விடாமல் கோஷமிட்ட பாஜகவினர்.. பொங்கி எழுந்த மமதா பானர்ஜி.. கம்முன்னு இருந்த மோடி!
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் அரசு நிகழ்ச்சியில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை இன்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஏற்பட்டது.
அப்போதுதான், பாஜக தொண்டர்கள் கூச்சலிட்டதால் ஆவேசம் அடைந்தார் மமதா பானர்ஜி.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கொல்கத்தா விக்டோரியா மெமோரியல் ஹால் மண்டபத்துக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தான் இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியது.
|
நேதாஜி நினைவு நாணயம்
விக்டோரியா மெமோரியல் ஹால் வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேதாஜி நினைவு நாணயம் மற்றும் தபால்தலையை வெளியிட்டார். இதன்பிறகு மோடிக்கு முன்பாக மமதா பானர்ஜி உரையாற்றுவார் என்று நிகழ்ச்சி நிரலின் படி அழைப்பு விடுக்கப்பட்டது.
பாஜக கோஷம்
அவர் எழுந்து வரும்போது, பாஜக தொண்டர்கள், "ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷங்களை எழுப்பினர். வேறு சில கோஷங்களையும் போடத் தொடங்கினர். இதனால் ஆவேசமாக, மேடையின் மைக் முன்பாக வந்து நின்றார் மமதா பானர்ஜி.
|
அவமானப்படுத்தாதீர்கள்
அரசு விழாவுக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. இது அரசியல் நிகழ்ச்சி கிடையாது. நிகழ்ச்சிக்கு வருமாறு வரவேற்று விட்டு இங்கு வந்த பிறகு என்னை அவமானப்படுத்துவது சரி கிடையாது. இது ஒரு கலாச்சார நிகழ்ச்சிதான்.. மக்களின் நிகழ்ச்சி.. அரசியல் நிகழ்ச்சி கிடையாது. அப்படியிருந்தும் உங்கள் செயல்பாடு மோசமாக இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் இப்போது உரையாற்ற போவது கிடையாது. என்று கூறிவிட்டு ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் பங்களா என்று கோஷமிட்டுவிட்டு மமதா அமர்ந்து விட்டார்.
புன்முறுவலுடன் மோடி
மமதா பானர்ஜி இவ்வாறு ஆவேசமாக பேசிய போது புன்முறுவலோடு அதை பார்த்துக்கொண்டே இருந்தார் மோடி. இதன் பிறகு அவரை உரையாற்றுவதற்கு மேடைக்கு அழைத்தனர். நேதாஜி பற்றி மோடி உரையாட தொடங்கினார். இதனால் விழாவில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.
மமதா பானர்ஜி காரசாரம்
பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மேற்கு வங்க மாநிலத்தில் கடும் அரசியல் போட்டி நிலவி வருகிறது. இன்னும் சில மாதங்களில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மமதா பானர்ஜி-மோடி இருவரும் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. எனவே, மாநில மக்கள் அனைவருமே மிகுந்த பரபரப்போடுதான் இந்த நிகழ்ச்சியை கவனித்தனர். அவர்கள் நினைத்தது போலவே, பாஜகவினர் மமதா பானர்ஜி கோபத்தை தூண்ட.. மமதா பானர்ஜி பதிலடி கொடுக்க.. கலாச்சார நிகழ்ச்சி, காரசார நிகழ்ச்சியாக மாறிவிட்டது.