மிக பெரிய முறைகேடு.. சுவேந்து அதிகாரி வெற்றி செல்லாது.. நந்திகிராம் முடிவுக்கு எதிராக மம்தா வழக்கு
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி பெற்ற வெற்றிக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதற்கான தேர்தல் எட்டு கட்டங்களாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக களமிறங்கியது. பிரதமர் மோடி தொடங்கி அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் எனப் பலரும் மேற்கு வங்கத்தில் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டனர்.
மேற்கு வங்க தேர்தல்
இருப்பினும், பாஜகவால் மேற்கு வங்கத்தில் மூன்று இலக்கில்கூட வெல்ல முடியவில்லை. மேற்கு வங்கத்தில் பாஜக வெறும் 77 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிய அமைத்தது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ச்சியாகப் பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும்.
நந்திகிராம் தொகுதி
இருப்பினும், அக்கட்சியினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு காலத்தில் மம்தாவின் வலது கரமாக இருந்த சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு எதிராகவே பாஜக சார்பில் களமிறங்கினார். நந்திகிராம் தொகுதியில் பிரசாரத்தின் போதே அனல் பறந்தது. அதேபோல வாக்கு எண்ணிக்கையும் நள்ளிரவு வரை சென்றது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் முன்னிலை மாறியது.
மம்தா வழக்கு
இறுதியில் சுவேந்து அதிகாரி சுமார் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அப்போதே மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி பெற்ற வெற்றிக்கு எதிராகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு
முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியான போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "நந்திகிராம் வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சுமார் 4 மணி நேரம் திடீரென சர்வர்கள் பழுதானது. ஆளுநர்கூட நான் வெற்றி பெற்றதாக என்னை அழைத்து வாழ்த்தினார். இருப்பினும் மாலை அனைத்தும் மாறியது. இது குறித்து வழக்கு தொடர்வேன்" என்று கூறியிருந்தார்.