பிரதமர் பதவிக்கு தகுதியானவர் மம்தா பானர்ஜி... புகழ்ந்து தள்ளிய பாஜக தலைவரால் சலசலப்பு
கொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என்று அம்மாநில பா.ஜனதா தலைவர் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அம்மாநில பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் பேசியதாவது: மம்தா பானர்ஜி பிரதமராக நல்ல வாய்ப்புள்ளது. நாட்டின் முதல் பெங்காலி பிரதமர் என்ற பெருமையை பெறவும் அவருக்கு வாய்ப்புள்ளது.
அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். பெங்காலி ஒருவர் பிரதமாக முடியும் என்றால், மம்தா பானர்ஜி தான் முதலிடத்தில் இருப்பார். மம்தா பானர்ஜியின் வெற்றியை பொருத்தே மேற்கு வங்கத்தின் தலைவிதி உள்ளது.
ஜோதி பாசுவை முதல் பெங்காலி பிரதமராக எங்களால் ஆக்க முடியவில்லை. ஏனென்றால், அவரின் கட்சி அவரை பிரதமராக விடவில்லை. முதல் பெங்காலி குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்று விட்டார். ஆகவே, இது பெங்காலி பிரதமரை தேர்வு செய்வதற்கான தருணம்'' என்றார்.
மேற்குவங்கத்தில் மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பாஜக கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் மம்தாவை பிரதமராக ஆக்குவது தொடர்பாக பாஜக தலைவர் ஒருவர் பேசி உள்ள கருத்து அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது