தமிழகத்தில் யாராவது இப்ப இந்தி படிப்பாங்களா...நடக்கவே நடக்காது.... மமதா பானர்ஜி பொளேர்
கொல்கத்தா: தமிழகத்தில் இப்போது இந்தி படிக்க வேண்டும் என்கிறார்கள்.. இப்போது யாராவது தமிழகத்தில் இந்தி படிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்ததும் புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தி பேசாத மாநிலங்கள் இதற்கு எதிராக கொந்தளித்து வருகின்றன.
மேற்கு வங்க அரசுக்கும் உள்துறை அமைச்சகத்துக்கும் இடையேயான மோதல் குறித்து சி.என்.என்.நியூஸ்18 டிவி ஆங்கில சேனலில் விவாதம் ஒன்று நடைபெற்றது. இதில் நெறியாளரும் பங்கேற்றவரும் இந்தியிலேயே உரையாடிக் கொண்டிருந்தனர்.
கொதித்த சட்டர்ஜி
இதனால் அதிருப்தி அடைந்த மேற்கு வங்க பேராசிரியர் கார்கா சட்டர்ஜி, வங்க மொழியில் அந்த நிகழ்ச்சியில் பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
மமதா கருத்து
இதனிடையே கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பாரம்பரியமும் மொழி அடையாளமும் உண்டு. அதுதான் நமது இந்தியா. ஆனால் மாநிலங்களின் அடையாளங்களை பண்பாட்டு விழுமியங்களை பாஜகவால் தீர்மானிக்க முடியாது.
இந்தி கற்குமா தமிழகம்?
தமிழகத்தில் இப்போது இந்தி படியுங்கள் என்கிறார்கள்... இந்தி மொழியை அங்கே யாராவது இப்போது படிப்பார்களா? அது நடக்காது என கூறியுள்ளார்.
குஜராத்தாக மாற்ற திட்டம்
முன்னதாக பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்ட வங்க சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் உருவசிலையை மமதா திறந்து வைத்தார். அப்போது பேசிய மமதா பானர்ஜி, மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. அந்த முயற்சி இங்கே நிறைவேறாது என எச்சரித்தார்.