சொல்லுங்க, அமித் ஷா... உங்க பையன் ஜெய் ஷாவுக்கு பணம் எப்படி வந்துச்சு... மம்தா சரமாரி கேள்வி
கொல்கத்தா: மம்தா ஆட்சியை ஊழல் ஆட்சி என்று உள துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்திருந்த நிலையில், அவரது மகன் ஜெய் ஷாவுக்குப் பணம் எப்படி வந்தது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரச்சார்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, பாஜகவின் முக்கிய தலைவர்கள் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஊழல்வாதி என்று விமர்சித்தார். மேலும், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் பேசினார்.
மோதி பார்க்கலாம்
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா. "மேற்கு வங்கத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை என்று அவர் கூறுகிறார். நான் அமித் ஷாவுக்கு சவால் விடுகிறேன். அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக முதலில் போட்டியிடுங்கள், பிறகு என்னை எதிர்ப்பது குறித்துச் சிந்திக்கலாம். அமித் ஷா அவரது மகன் ஜெய் ஷாவை அரசியலுக்கு அழைத்து வரட்டும், ஜனநாயக ரீதியில் மோதிப் பார்த்துவிடலாம்.
ஜெய் ஷா
அபிஷேக் பானர்ஜியை அவர் ஊழல்வாதி என்ற கூறுகிறார். அதற்கு எதாவது ஆதாரம் காட்ட முடியுமா? எங்கிருந்து அவருக்குப் பணம் வந்தது? கிரிக்கெட் வாரியத்தில் அவருக்கு எப்படி முக்கிய பதவி கிடைத்தது? அவர் என் மீது பொய்களைக் கூறலாம். ஆனால் அவர் என்னைப் புறக்கணிக்க முடியாது" என்றார்.
சட்ட ஒழுங்கு
தொடர்ந்து பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக இருப்பதா அமித் ஷா குறிப்பிடுகிறார். பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது? உன்னவ் பகுதியில் நடைபெற்ற பாலியல் சம்பவங்கள் குறித்து அவர் ஏன் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆபத்தானவர்கள்
மேலும், பாஜகவை வெளியாட்கள் என விமர்சித்துள்ள மம்தா பானர்ஜி, அவர்களுக்கு மேற்கு வங்கத்தின் கலாசாரம் குறித்து ஒன்றும் தெரியாது என்றும் மாநிலத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை அவர்கள் உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பாஜக மோதலை உருவாக்குவதாகக் குற்றஞ்சாட்டிய மம்தா, இந்தியாவுக்கு அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.