ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஜனாதிபதியிடம் கடிதம்.. நாயுடு யோசனையை நிராகரித்த மமதா
கொல்கத்தா: வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரும் எகடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் கொடுக்கலாம் என்கிற ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் யோசனையை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நிராகரித்துள்ளார்.
லோக்சபா தேர்தலின் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இத்தேர்தலில் பாஜகவுக்கு 200க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும் என்பது சந்திரபாபு நாயுடுவின் ஆரூடம்.
எனக்கு ஹீரோ எப்பவுமே என் அப்பாதான்.. வைரலாகும் பிரியங்கா காந்தியின் ட்வீட்
நாயுடுவின் யோசனை
அதே அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கிறார் சந்திரபாபு நாயுடு. இதனால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தங்களை ஒரு தரப்பாக கருதி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இப்போதே கடிதம் கொடுத்து விடலாம் என்கிற யோசனையை வெளிப்படுத்தினார் சந்திரபாபு நாயுடு.
மமதாவுடன் நாயுடு சந்திப்பு
இது தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்டோருடன் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கொலக்த்தா வருகை தந்து மமதா பானர்ஜியையும் நாயுடு சந்தித்து பேசினார்.
நாயுடு யோசனை நிராகரிப்பு
வாக்கு எண்ணிக்கை முன்பாகவே ஜனாதிபதியிடம் மனு கொடுக்கும் நாயுடுவின் யோசனையை மமதா ஏற்கவில்லை என கூறப்படுகிறது. வாக்குகள் முறையாக எண்ணப்பட வேண்டும்; வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் கவனிக்க வேண்டும் ஆகியவைதான் தற்போதைய பிரச்சனைகள்.
இடதுசாரிகளும் நிராகரிப்பு
ஆகையால் இதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும் என நாயுடுவிடம் மமதா திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால்தான் இருவரும் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லையாம். ஏற்கனவே இடதுசாரிகளும் நாயுடுவின் யோசனையை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.