தூள் தூளான சவடால்கள்.. கம்பீரமாக பதவியேற்ற மம்தா.. 3வது முறை முதல்வரானார்!
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் 3வது முறையாக இன்று முதல்வராக பதவியேற்றார்.
Recommended Video
மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் அமளிதுமளியை நாடே கடந்த 3 மாதங்கள் வேடிக்கை பார்த்தது. ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்று மம்தாவும், எப்பாடுபட்டாவது இம்முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பாஜகவும் மல்லுக்கட்டின.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுவேந்து அதிகாரி உட்பட பல முக்கிய தலைகளை பாஜக தன் வசம் இழுத்து, மம்தாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. எனினும், பலத்த போட்டி சமாளித்து, மெகா வெற்றியை பதிவு செய்தார்.
எளிமை.. போராட்ட குணம்.. மக்களுக்கான முதல்வர்.. யார் இந்த மம்தா? அரசியலில் உருவெடுத்தது எப்படி?
3வது முறையாக
மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார் 66 வயதான மம்தா பானர்ஜி. காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறார். இந்த சூழலில், இன்று (மே.5) நடந்த பதவியேற்பு விழாவில், 3வது முறையாக முதல்வராக கம்பீரமாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி.
எம்.எல்.ஏ. கிடையாது
கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இன்று காலை 10.45 மணிக்கு அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார். இதனால், ஒரு எம்.எல்.ஏ.வாக இல்லாமல் மம்தா முதல்வராக பதவி ஏற்றார்.
2011 ஆண்டு போல
எனினும், இப்படி இவர் பதவியேற்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்ற போதும் அவர் எம்.எல்.ஏ.வாக இல்லை. முதல்வராக பதவியேற்ற சில மாதங்கள் கழித்து போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றது குறிப்பிடத்தக்கது. அது போல் இம்முறையும், அவர் மீண்டும் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றிப் பெற வேண்டும்.
எளிமையான விழா
தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பதவியேற்பு நிகழ்வு குறைந்த நபர்களுடன் எளிமையாக நடைபெறும் என ராஜ்பவன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பிற மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேற்குவங்க மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோருக்கு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.