தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ! #AITC
டெல்லி: மம்தா பானர்ஜியின் திரணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
கடந்த 1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார் மம்தா பானர்ஜி. அக்கட்சியின் தலைவராகவும் மம்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 1998 மற்றும் 1999ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 8 இடங்களைக் கைப்பற்றியது அந்த கட்சி. பின்னர் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான மத்திய அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார் மம்தா, 2009ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் மீண்டும் ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார்.
முதல் முறையாக, கடந்த 2011ம் ஆண்டில் இக்கட்சி, மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்தது. அதன் தலைவர் மம்தா பானர்ஜி, முதலமைச்சராகவும் பதவியேற்றார். இதன் மூலம் கம்யூனிஸ்ட்களின் 34 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மம்தா.
இதையடுத்து அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 211 தொகுதிகளில் வென்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதேபோன்று, மக்களவையில் 32 எம்பி.,க்களையும், மாநிலங்களவையில் 12 எம்.பி.,க்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கொண்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, ஒரு கட்சி, 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களை மக்களவையில் கொண்டிருக்க வேண்டும் அல்லது மக்களவைத் தேர்தல் நடக்கும்போது, 4 வெவ்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு, 4 தொகுதிகளில் வென்று, 6% வாக்குகளையும் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், அக்கட்சிக்கு தேசிய அந்தஸ்து வழங்கப்படும்.
இது மட்டுமின்றி, மாநில கட்சி என்ற அந்தஸ்தையும் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கும் மேல் தக்கவைத்திருக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து விதிமுறைகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எளிதாக கடந்துவிட்டதால், அதற்கு தற்போது தேசிய கட்சி அந்தஸ்து வழங்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அளவில் பாஜக., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இந்த பட்டியலில், 7வது கட்சியாக தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது.