நேதாஜி குறித்த அருண்ஜேட்லி ட்விட்டர் பதிவால் பெரும் கொந்தளிப்பு- மமதா பானர்ஜி அதிர்ச்சி!!
டெல்லி: நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்து யுத்தம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே அவரது பற்றாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் இன்று நேதாஜி நினைவு நாள் என்று மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி ட்விட்டரில் பதிவிட பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி தைவான் விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்படுவது உண்டு. ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட பல ஆவணங்களில் நேதாஜி இந்த விமான விபத்துக்குப் பின்னரும் உயிருடன் இறந்ததாக நம்பப்படுகிறது.
இது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும் மேற்கு வங்க மாநில அரசும் வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தமது ட்விட்டர் பதிவில் நேதாஜி நினைவுநாள் எனக் குறிப்பிட்டு புகழஞ்சலி செலுத்தியிருந்தார்.
இதற்கு நேதாஜி குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இத்தனைக்கும் அண்மையில் பாஜகவில் சேர்ந்த நேதாஜியின் உறவினரான சந்திரபோஸ் கூட, அருண்ஜேட்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசப்பட்டார்.
அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் இன்று ரக்ஷா பந்தன் நாள்.. நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நேதாஜி தொடர்பான அருண்ஜேட்லிஜியின் இன்றைய காலை பதிவு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.. எங்களை காயப்படுத்தி விட்டது என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அருண்ஜேட்லி அந்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவையே நீக்கிவிட்டார்.