பாஜகவுக்கு எதிராக கூட்டணி: டெல்லியில் சரத்பவார், கனிமொழியுடன் மமதா ஆலோசனை
டெல்லியில் சரத்பவார், சோனியா காந்தி உள்ளிட்டோரை மமதா பானர்ஜி சந்தித்து பேசுகிறார்.
டெல்லி: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி டெல்லியில் முகாமிட்டுள்ளார். பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுகவின் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோரை மமதா பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பாஜக, காங்கிரஸுக்கு எதிரான 3-வது அணி அமைக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முதலில் அழைப்பு விடுத்தார். இதற்கு மமதா பானர்ஜி முதலில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களும் 3-வது அணி முயற்சியில் இணைய ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கொல்கத்தாவில் மமதா பானர்ஜியை சந்திரசேகர் ராவ் சந்தித்தும் பேசினார்.
அதேநேரத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. மூன்றாவது அணி அமைக்கப்பட்டால் அது பாஜகவுக்குதான் சாதகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் மமதா பானர்ஜி முகாமிட்டிருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோரை மமதா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களை மமதா சந்திக்கிறார். பாஜகவுக்கு எதிரான வலிமையான ஒரு கூட்டணியை உருவாக்குவது குறித்து இச்சந்திப்புகளில் மமதா ஆலோசனை நடத்த உள்ளார்.