ஜெயலலிதாவுக்கு கொடநாடு மாதிரி மம்தாவுக்கு டார்ஜிலிங்!
டார்ஜிலிங்: டார்ஜிலிங் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களின் நலனுக்காக சிறிய அளவில் முதல்வர் அலுவலகம் டார்ஜிலிங்கில் அமைக்கப்பட உள்ளதாக மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மமதாபானர்ஜி,கலிம்பாங் கிராமத்திற்கு சென்றிருந்த போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்த பிராந்திய மக்களின் வசதிக்காக சிறிய அளவில் முதல்வர் அலுவலம் ஒன்று டார்ஜிலிங் பகுதியில் அமைக்க உள்ளதாக கூறினார்.
இந்த பிராந்திய மக்களுக்குத் தேவையான நிதி உதவிகள் உடனடியாக கிடைக்க இது வழிவகுக்கும் என்றும் கூறினார். மாதத்திற்கு மூன்று நாட்கள் டார்ஜிலிங் அலுவலகத்திற்கு வந்து பணிகளை செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் வடக்குப் பகுதியில் உள்ள சிலிகுரியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் அலுவலகம் சிறந்த முறையில் செயல்படுவதாகவும் கூறினார். டார்ஜிலிங் பகுதியில் நீர்மின் உற்பத்த்திட்டமும், மருத்துவக் கல்லூரியும் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி கொடநாடு சென்று முதல்வர் பணிகளை மேற்கொள்வதைப் போல மம்தாவும் குளுகுளு டார்ஜிலிங்கில் அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.