பெரிய பதவியில் இருக்கீங்க.. கவனமா பேச வேண்டாமா.. ஹரியானா முதல்வருக்கு மமதா குட்டு
கொல்கத்தா: காஷ்மீர் பெண்கள் குறித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் (பிஜேபி) கூறிய கருத்தை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்களை கூறுவது தவறு என்று அவர் தெரிவித்தார்.
உயர் பொது பதவியில் இருப்பவர்கள் ஜம்மு-காஷ்மீர் மக்களைப் பற்றி சர்ச்சை கருத்துக்களைத் தெரிவிக்க கூடாது என்றும் மமதா பானர்ஜி கூறினார்.
மமதா இன்று வெளியிட்ட ட்வீட்டில், "நமது ஜம்மு-காஷ்மீரின் அன்பான மக்களைப் பற்றி உணர்ச்சிவசப்படக்கூடிய கருத்துக்களை வெளியிட கூடாது. உயர் பொது பதவியில் இருப்பவர்கள் தங்களது வார்த்தைகளில் கவனம் வைக்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் இது புண்படுத்தியுள்ளது". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"முந்தைய மருமகள்கள் பீகாரில் இருந்து வந்தனர், ஆனால் இப்போது நாம் காஷ்மீரில் இருந்து மணமகள்களை ஹரியானாவுக்கு அழைத்து வருவோம்" என்று மனோகர் லால் கட்டார் பேசியதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. தெரிவித்திருந்தது. ஆனால், கட்டார் உண்மையில் மாநிலத்தில் பாலின விகித சமநிலை பற்றி பேசியதாகவும், செய்தி நிறுவனம் அதை தவறாக மொழி பெயர்த்துவிட்டதாகவும், முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
We,and more so people holding high public office, must restrain ourselves from making insensitive comments about the beloved people of Jammu and Kashmir. These are hurtful, not only for J&K, but the entire nation
— Mamata Banerjee (@MamataOfficial) August 10, 2019
ஹரியானா மாநிலத்தில் பாலின விகித சமநிலையை மீட்டெடுப்பதில் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கை குறித்து பேசிய கட்டார், 1,000 ஆண்களுக்கு பெண்கள் விகிதம் 850 என்பதாக இருந்தது. இப்போது 933 வரை உயர்ந்துள்ளது. ஆனால் அது போதாது, பாலின சரிவிகிதம் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இவ்வாறு கட்டார் பேசியதாக முதல்வர் அலுவலகம் வீடியோ வெளியிட்டுள்ளது.