வாக்குச்சாவடியில் நடந்தது இனப்படுக்கொலை.. வீரர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை.. அட்டாக் மோடில் மமதா
கொல்கத்தா: கூச் பிகார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டுள்ள மம்தா பானர்ஜி, வாக்காளர்களின் கழுத்து மற்றும் மார்பு பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நேற்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் கூச் பிகார் என்ற இடத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. அங்கு வாக்குச்சாவடி எண் 126இல் துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடைபெற்றது.
அங்குப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகிறது.
போதுமான பயிற்சி இல்லை
இந்நிலையில், வடக்கு வங்கத்தில் சிலிகுரி என்ற பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ஒரு கூட்டத்தை கட்டுப்படுத்தும் பயிற்சியை சிஐஎஸ்எஃப் படையினர் பெற்றிருக்கவில்லை. இப்போது அவர்கள் உண்மைகளை மறைக்க விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் கூச் பிகாருக்கு செல்ல 72 மணி நேரம் தடை விதித்துள்ளனர்.
விதிகளைப் பின்பற்றவில்லை
கூட்டத்தைக் கட்டுப்படுத்த என சில விதிகள் உள்ளன. கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றால் முதலில் தடியடி நடத்த வேண்டும். பின்னர் கண்ணீர் புகைக் குண்டுகளையும் நீர் பீரங்கிகளையும் பயன்படுத்தலாம். இதுதான் முறையான விதிகள். இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன். பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை வாக்களிக்க விடுவதில்லை. மக்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இது ஒரு இனப்படுகொலை
எந்த ஒரு விதியையும் முறையாகப் பின்பற்றாமல் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாகக் கூறிய மம்தா, இதை இனப்படுகொலை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், காலை நோக்கிச் சுடாமல் கழுத்து மற்றும் மார்பு பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்நியர்களாலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாஜகவை மம்தா தொடர்ந்து அந்நியர்கள் என்றே அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
வீடியோ காலில் ஆறுதல்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்று கூச் பிகார் சென்று, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற மம்தா திட்டமிட்டிருந்தார். இருப்பினும், அங்கு அரசியல் கட்சியினர் செல்ல 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மம்தா வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசினார். அப்போது தடை காலம் முடிந்ததும் நேரில் வந்து சந்திப்பதாக மம்தா தெரிவித்தார்.