புது வருஷ முதல் நாளில் டிவிட்டரில் இணைந்த மமதா பானர்ஜி, பவன் கல்யாண்
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் புத்தாண்டின் முதல் நாளிலேயே டிவிட்டர் அக்கவுண்ட் தொடங்கியுள்ளனர்.
நாட்டிலுள்ள பலராலும் அறியப்படும் முதல்வர்களில் ஒருவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அவர் அதிகம் தென்படுவதில்லை. மமதாவின் திரினாமுல் காங்கிரசுக்கு போட்டி கொடுக்கும் பாஜகவோ சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆழ காலூன்றியுள்ளது. இந்நிலையில் காலத்தின் கட்டாயத்தை கருத்தில் கொண்டு மமதாவும் டிவிட்டர் கோதாவில் குதித்துள்ளார். 2015 புத்தாண்டை இதற்காக அவர் தேர்வு செய்துள்ளார்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது டிவிட்டர் அக்கவுண்டை அவர் தொடங்கியுள்ளார். @MamataOfficial என்ற பெயரில் டிவிட்டரில் அவரை தொடர்பு கொள்ளலாம்.
நம்மூரில் சூப்பர் ஸ்டாரெல்லாம் டிவிட்டருக்கு வந்து ரொம்ப நாளாகிவிட்ட நிலையில் இப்போதுதான், தெலுங்கின் பவன்கல்யாண் டிவிட்டர் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார். @PawanKalyan என்ற பெயரிலான கணக்கில் இவரை பின்தொடரலாம். இவரும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மங்களகரமாக டிவிட்டர் கணக்கை துவக்கியுள்ளார்.
இதில் என்ன வேடிக்கை என்றால், ஒரு மாநில முதல்வரான மமதாவை பின்தொடர்வோர் சுமார் ஆராயிரம் பேர்தான். ஆனால் அதே நாளில் டிவிட்டர் கணக்கை துவங்கிய பவன் கல்யாணை பின்தொடர்வோர் 60 ஆயிரம் பேர்.