மேற்கு வங்கத்தை.. வங்கதேசத்துடன் இணைக்க முயலும் மம்தா.. மே. வங்க பாஜக தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
கொல்கத்தா: ஒருங்கிணைந்த வங்கதேசத்தை உருவாக்குவதே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நோக்கம் என்று அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்,
நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். கடந்த சனிக்கிழமை இவரது 124ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதேபோல மேற்கு வங்கத்திலும் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்டர். அப்போது, மம்தா பானர்ஜி பேசத் தொடங்கும்போது, கூட்டத்திலிருந்தவர்கள் பேசவிடாமல் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டனர். இதனால் மம்தா பானர்ஜி தனது பேச்சைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.
மகளுக்கு மொட்டை அடித்து கொண்டிருந்தார் அந்த அம்மா.. அப்போதுதான்.. அப்படியே உறைந்து போன மக்கள்!
ஜெய் பங்களா கோஷம்
இரண்டு நாட்கள் ஆகியும் இந்தச் சம்பவம் இன்னும் ஓயவில்லை. இது தொடர்பாக இன்று மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக பிரிவின் தலைவர் திலீப் கோஷ், தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில் மம்தா பானர்ஜியுடன் சர்ச்சைக்குரிய வாசகம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அதில் "மதிப்பிற்குரிய இந்த நபர் இஸ்லாமிய வங்கதேசத்தின் முழக்கமான ஜெய் பங்களா என்ற வங்கதேச முழக்கத்தைக் கோஷமிடுகிறார். க்ரேட்டர் வங்கதேசத்திற்காகவே அவர் போராடுகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
சீறிய மம்தா
இந்த நிகழ்ச்சியில் பேச தொடங்கிய மம்தா, "நேதாஜிக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியைக் கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்த மத்திய அரசுக்கு நன்றி" என்று பேச தொடங்கினார். அப்போதே சிலர் ஜெய் ஸ்ரீ ராம் எனக் கோஷமிட தொடங்கிவிட்டனர். இதனால் கடுப்பான மம்தா, "இது அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி. இதில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். இதற்கு மேல் நான் பேசவில்லை. ஜெய் பங்களா, ஜெய் ஹிந்து" என்று கூறி, தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
மற்ற புகைப்படங்கள்
மம்தாவின் இந்த பேச்சைக் குறிப்பிடும் வகையிலேயே திலீப் கோஷ் இந்தப் போஸ்ட்ரை பகிர்ந்துள்ளார். இது தவிர மேலும் இரண்டு போஸ்டர்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்றில் 2019 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்காக வங்கதேச நடிகர் ஃபிர்தவுஸ் பிரச்சாரம் செய்யும் புகைப்படம் இருந்தது. மேலும், வட கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட துர்கா பூஜையில் வங்கதேச கிரிக்கெட் வீரர் பங்கேற்ற புகைப்படத்தையும் திலீப் கோஷ் பகிர்ந்திருந்தார்.
விரைவில் தேர்தல்
மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கவுள்ளது. தற்போதே தேர்தல் பணிகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் தொடங்கிவிட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன் உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சுவேந்து அதிகாரி உட்பட பல முக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். அதன் பின்னரும் திரிணாமுல் எம்எல்ஏகள் பாஜகவில் இணைவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றனர்.