தேர்தல் முடிவதற்குள் மம்தாவும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என உச்சரிப்பார் - அமித் ஷா சவால்
கூச் பேஹர்: மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் முடிவதற்குள் முதல்வர் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுவார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் பராக்கிராம் திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் போது முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்ற மேடைக்கு வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் 'ஜெய் ஸ்ரீராம்', மோடி, மோடி என முழக்கமிட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த மம்தா, "இது அரசு நிகழ்ச்சி. அரசியல் நிகழ்ச்சி அல்ல. நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்து விட்டு இதுபோன்று நடப்பது சரியல்ல. அரசாங்க விழாவில் கண்ணியம் காக்க வேண்டும்" என்று கூறிவிட்டு விழாவில் பேச மறுத்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், கூச் பேஹரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று இந்தியாவில் சொல்லாமல், பாகிஸ்தானிலா சொல்வார்கள்?
'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொன்னதற்கு மம்தா பானர்ஜி கோபப்படுகிறார். தேர்தல் முடிவதற்குள் மம்தாவும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்வார் என நான் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.