கட்டுமான பணி நடக்குது.. அந்தப் பக்கம் போங்க.. அமித் ஷா ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்த மம்தா
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெறவுள்ள பாஜக பேரணியில் கலந்து கொள்ள வரும் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.
மாநிலத்தில் ரத யாத்திரை நடத்துவதால் சட்டம் ஒழுங்கு சீர் கெடுவதுடன், மத நல்லிணக்கமும் பாதிக்கப்படுகிறது என்பதால் இதற்கு அனுமதிக்கக் கூடாது என மம்தா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதையடுத்து ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. எனினும் மேற்கு வங்கம் முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தது. இதையடுத்து அமித்ஷாவின் பொதுக் கூட்டம் 20-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
அமித்ஷா வீடு திரும்பினார்
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அந்த பொதுக் கூட்டம் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவரது உடல் நலம் தேறி நேற்றைய தினம் அமித்ஷா வீடு திரும்பினார்.
மம்தா அரசு
மேற்கு வங்கத்தில் 5 இடங்களில் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள வரும் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க மாநில பாஜக சார்பில் மம்தா அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
கட்டுமான பணிகள்
எனினும் மாவட்ட நிர்வாகமோ மால்டா விமான நிலையத்தில் சில கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. விமான ஓடுதளத்தில் மணல், கற்கள், தூசுகள் படிந்துள்ளன. இதனால் இந்த வாரம் முழுவதும் விவிஐபிகளின் ஹெலிகாப்டர்கள் மால்டா ஓடுதளத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாது என தெரிவித்து விட்டது.
அனுமதி
ஆனால் பாஜகவோ இது திட்டமிட்டே மறுக்கப்படுகிறது என கூறியுள்ளது. மேலும் மால்டா விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்தில் ஒரு துளி தூசு கூட இல்லை. இது முழுக்க முழுக்க காழ்புணர்ச்சியால் மம்தா அரசு அனுமதி மறுக்கிறது என்று பாஜக புகார் கூறுகிறது. இதனால் வங்கதேச எல்லையில் உள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டரை நிறுத்த எல்லை பாதுகாப்பு படையினரிடம் பாஜக அனுமதி கோரியுள்ளது.