'மெட்காலா' பிரியங்கா சோப்ராவின் தோற்றத்தில் மம்தா பானர்ஜியின் படம்: பாஜக பெண் நிர்வாகி கைது!
ஹவுரா: மெட்காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான ஆடை, அலங்காரத்துடன் நடிகை பிரியங்கா சோப்ரா வந்த தோற்றத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முகத்தை ஒட்டி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பாஜக பெண் நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மேற்குவங்கத்தில், லோக்சபா தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்காளர்களை கவர்வதற்கு பல்வேறு யுக்திகளை கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும் இடையிலான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது இரு தலைவர்களும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதைபார்த்து, தொண்டர்களும் உசுப்பேறி, தங்கள் பங்குக்கு புதுமையான பிரச்சார யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அது சில சமயம் எல்லை மீறுவதாக அமைந்து விடுகிறது.
அதுபோன்று, ஒரு செயலை மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்ட இளையோர் அணியை சேர்ந்த பெண் நிர்வாகியான பிரியங்கா சர்மா என்பவர் செய்துள்ளார். அண்மையில் நியூயார்க் நகரில் நடந்த மெட்காலா நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த வித்தியாசமான ஆடையும், ஒப்பனையும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு பதிலாக, மம்தா பானர்ஜியின் முகத்தை ஃபோட்டஷாப் செய்து ஒட்டிய படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் விபாஸ் ஹஸ்ரா போலீசில் புகார் அளித்தார்.
விபாஸ் ஹஸ்ரா தனது புகாரில்," பிரியங்கா சர்மாவின் செயல், சமூக நல்லிணக்கத்தை கெடுத்து, வன்முறைக்கு அடிகோலிவிடும். முதல்வர் மம்தா பானர்ஜியை அவமானப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், மேற்கு வங்க கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி உள்ளார். இது சைபர் குற்றமாக கருதலாம்," என்று தெரிவித்துள்ளார்.
இதனை விசாரித்த போலீசார்," பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மாவை கைது செய்து ஹவுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது சமூக ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை மக்களிடம் உடனடியாக கொண்டு செல்வதற்கான முக்கிய கருவியாக மாறி இருக்கின்றன.
உண்மைத் தகவல்களைவிட பொய்யான செய்திகளையும், தலைவர்கள் பற்றிய கேலி, கிண்டல் சித்திரங்களையும் வெளியிட்டு மக்களை திசை திருப்புவதில் சில கட்சியினரின் சமூக ஊடகப்பிரிவு நிர்வாகிககள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பல நேரங்களில் இது வரம்பு மீறும் செயலாக அமைந்துவிடுகிறது.