வயதான பாலியல் தொழிலாளிகளுக்கு இலவச காப்பகங்கள்: மம்தா புதுமை திட்டம்
கொல்கத்தா: வயதான, கைவிடப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு உணவு, மருத்துவத்துடன் கூடிய இலவச காப்பகங்கள் அமைக்கும் திட்டத்தை மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
கொல்கத்தாவின் சோனாகச் பகுதியில் பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். வறுமையாலும், குடும்ப சூழ்நிலையாலும் இங்குள்ள விபச்சார தரகர்களிடம் சிக்கும் பெண்கள், நீண்ட காலம் சோனாகச் விபச்சார விடுதிகளில் தங்கி தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியை கழிக்கின்றனர்.
ஆசியா கண்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெரிய விபச்சார சந்தையாக இந்த இடம் கருதப்படுகிறது.
வயதான பாலியல் தொழிலாளிகள்
வயதாகி, முதுமை ஏற்பட்டு, இளமையும் அழகும் பறிபோன நிலையில், இந்த பெண்கள் விடுதிகளில் இருந்து வெளியே விரட்டப்படுகின்றனர்.
எய்ட்ஸ் பாதிப்பு
சாப்பிடுவதற்கு போதுமான உணவு கிடைக்காமலும், எய்ட்ஸ் போன்ற தீராத பெருநோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும் வழிப்போக்கர்களிடம் பிச்சை எடுத்து தின்று, தெருவின் ஓரங்களில் உறங்கி தங்களின் ஆயுளின் எஞ்சிய நாட்களை கடத்துகின்றனர்.
அனாதைகளாக மரணம்
முன்னாள் பாலியல் தொழிலாளிகளில் பெரும்பாலானவர்கள் அனாதைப் பிணங்களாகவே கொல்கத்தா நகரவீதிகளில் செத்து மடிகின்றனர்.
நோய்வாய்பட்டவர்கள்
மாநில அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி, வயதான மற்றும் நோய்வாய்பட்ட சுமார் 750 முன்னாள் பாலியல் தொழிலாளிகள், கொல்கத்தா நகர வீதிகளில் அனாதைகளாக வாடிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
நலவாழ்வு
வயதான முன்னாள் பாலியல் தொழிலாளிகளின் நல்வாழ்வுக்கு மாநில அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என பல்வேறு சமூகத் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தன.
இலவச காப்பகம்
இதனையடுத்து, மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள மாநில அரசு, இவர்களுக்கு உணவு, மருத்துவத்துடன் கூடிய இலவச காப்பகங்கள் அமைக்கும் திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.
'இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 2 புதிய விடுதிகள் கட்டப்பட்டு, அவற்றில் 200 பெண்கள் தங்க வைத்து பராமரிக்கப்படுவார்கள்' என மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.