அலைகடலென திரண்ட மக்கள்... கொல்கத்தாவில் மம்தா தலைமையிலான கூட்டம் தொடங்கியது
கொல்கத்தா
Recommended Video
கொல்கத்தா: 'ஒருங்கிணைந்த இந்தியா' என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு வெள்ளம் போல் மக்கள் திரண்டுள்ளனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
கொல்கத்தாவின் வரலாற்று சிறப்பு மிக்க 'பிரிகேட் பரேட்' மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் 22 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
|
22 கட்சிகளின் தலைவர்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதலமைச்சர்களான குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சரத்பவார், அகிலேஷ் யாதவ், ஓமர் அப்துல்லா என 22 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
ராகுல் பங்கேற்கவில்லை
உடல்நலக்குறைவால் சோனியா காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதே சமயம், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என்ற போதும் மம்தாவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவின் ஒற்றுமையை இக்கூட்டம் பறைசாற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
|
பலத்த பாதுகாப்பு
தலைவர்கள் பேசுவதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிரா கோபுரங்கள், மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையம் என நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பலம் காட்டும் மம்தா
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கட்சியினரும் பிப்ரவரி 3-ல் ‘பிரிகேட் பரேட்' மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் மாபெரும் கூட்டம் நடத்த உள்ளனர். இதன்மூலம் தனது கட்சியின் வலிமையை தேசிய அளவில் பறைசாற்ற திட்டமிட்டுள்ளனர். ஆனால், அவர்களை முந்தும் விதமாக மம்தா மாபெரும் கூட்டத்தை கூட்டியுள்ளார்.