அம்மாடியோவ் போனஸ்.. ஜெய் வங்கம், 10% இடஒதுக்கீடு.... மமதாவின் அடேங்கப்பா வியூகம்!
கொல்கத்தா: லோக்சபா தேர்தல் பின்னடைவு, கட்சியை விட்டு விலகும் எம்.எல்.ஏக்கள் என அடுத்தடுத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி 2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அதிரடி காட்டி வருகிறார். போலீசாரின் நீண்டகால கோரிக்கைகளை அதிரடியாக நிறைவேற்றி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார் மமதா பானர்ஜி.
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களில் வென்றது. கடந்த தேர்தலில் 34 தொகுதிகளை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ் இம்முறை 22 தொகுதிகளைத்தான் கைப்பற்ற முடிந்தது.
பழங்குடியினர் பகுதியான ஜங்கல் மஹாலில் 5 லோக்சபா தொகுதிகளையுமே பாஜக அள்ளியது. வடக்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் ஒன்றில் கூட திரிணாமுல் காங்கிரஸ் வெல்ல முடியவில்லை. அப்பகுதியில் பாஜக 7 தொகுதிகளையும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றது.
பாஜகவை தடுக்க ஆலோசனை
இதையடுத்து மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை கைப்பற்றும் என அக்கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றன. பாஜகவின் இந்த விஸ்வரூபத்தைத் தடுக்க மமதா தீவிரம் காட்டி வருகிறார். முதல் கட்டமாக கடந்த மே 30-ந் தேதி திரிணாமுல் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் மமதா.
கோபத்தில் அரசு ஊழியர்கள்
அக்கூட்டத்தில் பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை பாக்கி இருப்பதால் அவர்கள் தேர்தலை புறக்கணித்துவிட்டனர். இது நமக்கு பெரும் பின்னடைவு என சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினரின் 70 லட்சம் வாக்குகள் பாஜகவுக்கு போய்விட்டது எனவும் அக்கூட்டத்தில் மமதாவிடம் தெரிவிக்கப்பட்டது.
கட்சியினர் மீது கண்
இதையடுத்து அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய மமதா பானர்ஜி, அரசு நலத் திட்டங்களை செயல்படுத்த கண்காணிப்பு குழுவை அமைத்தார். ஜூன் 10-ந் தேதி முதல் இந்த கண்காணிப்பு குழு முதல்வர் மமதா அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கத் தொடங்கியது. அரசு நலத்திட்டங்களில் ஊழல் முறைகேடுகள் நடைபெறுவது குறித்து புகார் தர தனி கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டது.
கமிஷனுக்கு கட்
பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் களை எடுக்கும் பணிகளை முடுக்கிவிட்டார் மமதா. பொதுமக்களுக்கு சேர வேண்டிய அரசு உதவித் தொகைகளில் கமிஷன் வாங்கிய கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தன. பாஜகவினர் முன்வைக்கும் ஊழல் மலிந்த அரசு என்கிற கறையைப் போக்க இந்த நடவடிக்கை உதவும் என்பது மமதாவின் நம்பிக்கை.
ரூ232 கோடி போனஸ்
அடுத்தகட்டமாக யாருமே எதிர்பாராத அதிரடியாக மாநில போலீசாருக்கு பெரும் தொகையான போனஸ் அறிவிப்பை வெளியிட்டார். அதுவும் 1988-ம் தேதியிட்டு ஒவ்வொரு ஆண்டும் 30 நாட்கள் போனஸ் என அறிவித்து திக்குமுக்காட வைத்துவிட்டார் மமதா பானர்ஜி. அத்துடன் முடியவில்லை மமதாவின் அறிவிப்பு. கடந்த ஜூன் 28-ந் தேதியன்று 52 நாள் ஊக்கத்தொகை அறிவிப்பை உடனே அமல்படுத்தவும் உத்தரவிட்டார். மமதாவின் இந்த அதிரடி அறிவிப்புகளால் மாநில அரசுக்கான கூடுதல் செலவு ரூ232 கோடி என்கின்றனர் மாநில உள்துறை அதிகாரிகள்.
கிஷோர் யோசனை
அண்மையில் நீர் பாதுகாப்பு நாளை பொதுமக்கள் பங்கேற்புடன் மமதா நடத்தி இருந்தார். தேர்தல் வல்லுநர் பிரஷாந்த் கிஷோரின் யோசனைப்படியே இத்தகைய நிகழ்ச்சிகளை மமதா நடத்தியிருக்கிறார். அதேபோல் பாஜக தலைவர்களுடன் எந்த ஒரு மோதல் போக்கையும் கடைபிடிக்கவும் கூடாது எனவும் கட்சியினருக்கு மமதா உத்தரவிட்டிருக்கிறார். அப்படி அமைதி காப்பதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு வன்முறை கட்சி என்கிற இமேஜ் மாறும் என்பது கணக்கு.
மோடி இடஒதுக்கீடு
பிரதமர் மோடி அறிவித்த உயர்ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து முதலில் கேள்வி எழுப்பியிருந்தார் மமதா பானர்ஜி. ஆனால் தற்போது சப்தமே இல்லாமல் மேற்கு வங்கத்தில் உயர் ஜாதியினருக்கு 10% வழங்கப்படும் என அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது மமதா அரசு. வாக்காளர்களை தக்க வைக்க வங்க தேசிய அரசியலையும் மமதா கையில் எடுத்திருக்கிறார்.
இந்துத்துவாவுக்கு எதிராக வங்க தேசியம்
பாஜகவின் இந்துத்துவா அரசியல் முழக்கம் ஜெய் ஸ்ரீராம் என்கிற போது நாங்கள் ஜெய்ஹிந்த் ஜெய் பங்களா என்போம் என்கின்றனர் திரிணாமுல் தலைவர்கள். தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் இந்த முழக்கங்களை எழுதி வைத்துள்ளனர் திரிணாமுல் நிர்வாகிகள்.
வங்க மொழிக்கு முன்னுரிமை
மேற்கு வங்க பள்ளிகளில் வங்க மொழி கட்டாயப்பாடமாக்கியும் அறிவித்திருந்த மமதா, தங்கள் மாநிலத்தில் குடியேறுவோர் கட்டாயம் வங்க மொழியை கற்றிருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இப்படியான மமதாவின் இந்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகித்தான் போகும் என்கின்றனர் பாஜக தலைவர்கள்.