அடி மேல் அடி.. ஒரு ரத யாத்திரையை நடத்த இத்தனை பிரச்சனையா?.. பாவம் அமித் ஷா!
பாஜக மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரையை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது.
Recommended Video
கொல்கத்தா: பாஜக கட்சி மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரையை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது.
பாஜக ஒவ்வொரு முறையும் ரத யாத்திரை மூலம் பெற்ற பயன்கள் ஏராளம். பாஜக வட மாநிலத்தில் ஒரு இடத்தில் ரத யாத்திரை நடத்தினால், அதற்கு அடுத்த தேர்தலில் அங்கு பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி. இது பலமுறை பாஜகவிற்கு நடந்துள்ளது.
ஆனால் இந்த முறை பாஜக ரத யாத்திரையை நடத்துவதற்கே முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரையை நடத்த கடந்த மூன்று மாதமாக பாஜக காத்து இருக்கிறது.
என்ன திட்டம்
மேற்கு வங்கத்தில் கூச்பேகர் பகுதியில் ரத யாத்திரை நடத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டு இருந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமித் ஷா இந்த திட்டத்தை வகுத்தார். 3 மாதங்களுக்கு முன்பே பாஜக இதற்காக தயாராகி இருந்தது.
மமதா பானர்ஜி
ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இந்த ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த பேரணியால் அமைதி கெடும், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மமதா பானர்ஜி கூறினார். இதையடுத்து பாஜக உடனடியாக கொல்கத்தா ஹைக்கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
அட போங்க பாஸ்
கொல்கத்தா ஹைகோர்ட்டில் பாஜகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து பாஜக ரத யாத்திரைக்கு தயாரானது. ஆனால் ஹைகோர்ட் பென்ச் மீண்டும் அந்த வழக்கை விசாரித்து, தான் கொடுத்த தீர்ப்பையே மாற்றியது. அதன்படி பாஜகவிற்கு மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த தடை விதித்தது.
பாஜக அதிர்ச்சி
இது பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது. இதையடுத்து பாஜக தற்போது மேல்முறையீடு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி கேட்டு மேல்முறையீடு செய்துள்ளது. அதேபோல் இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
மீண்டும் அடி
ஆனால் பாஜகவிற்கு இதில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி வழக்கை அவசர வழக்காக எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் ரத யாத்திரை திட்டத்தை மேலும் தள்ளிப்போடும் நிலைக்கு அமித் ஷா சென்றுள்ளார்.
என்ன செய்வது
இதனால் பாஜக பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்துவதன் மூலம் பெரிய பலனை பெறலாம் என்று பாஜக நினைத்தது நிறைவேறாமல் போய் இருக்கிறது. அமித் ஷாவின் ராஜ தந்திரம் தோல்வி அடைந்தது பாஜகவினருக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.