ஜெய் ஸ்ரீ ராம் என்று இங்கு கோஷமிடாமல்... பாகிஸ்தானிலா கோஷமிட முடியும்... அமித் ஷா தாக்கு
கொல்கத்தா: ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை மம்தா பானர்ஜி அவமானமாகக் கருதுகிறார் என்று விமர்சித்துள்ள அமித் ஷா, ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை இங்கு எழுப்பாமல் பாகிஸ்தானிலா எழுப்ப முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்..
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் இணைந்து மேற்கு வங்கத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கு வங்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.
அதிலும் மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பாஜக தலைவர்களும் மேற்கு வங்கத்தில் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று யாத்திரை ஒன்றை உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
ஜெய் ஸ்ரீராம் கோஷம்
இதில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, "ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை அவமானமாக மம்தா பானர்ஜி கருதுகிறார். பலரும் இந்த கோஷத்தால் பெருமிதம் அடைகிறார்கள். ஆனால் மம்தா மட்டும் ஏன் அவமானமாகக் கருதுகிறார். ஏனென்றால் இங்குள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வாக்குகளை வாங்க வேண்டும். அதற்காகவே அவர் இப்படி நடந்துகொள்கிறார். தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் அவரும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்புவார். இந்த ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை இங்கு எழுப்பாமல் பாகிஸ்தானிலா எழுப்ப முடியும்" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மாற்றத்திற்கான யாத்திரை
மேற்கு வங்கத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமித ஷா "மாற்றத்திற்கான யாத்திரை" என்ற யாத்திரையையும் தொடங்கி வைத்தார், இது குறித்து அவர் பேசுகையில், "இங்குள்ள முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ என யாரையும் மாற்ற இந்த யாத்திரையை நாங்கள் நடத்தவில்லை. இது மேற்கு வங்கத்திலுள்ள நிலைமையை மாற்றுவதற்கான யாத்திரை. எல்லைகளில் ஊடுருவும் அந்நியர்களைத் தடுப்பதற்கான யாத்திரை. பாஜக ஆட்சிக்கு வந்தால், பறவைகள்கூட எல்லையைக் கடக்க முடியாத நிலையை உருவாக்குவோம்" என்றார்
மம்தாவின் எண்ணம்
தொடர்ந்து மம்தா பானர்ஜியை தாக்கி பேசிய அவர், "மம்தாவின் முழு கவனமும் அவரது மருமகனை அடுத்த முதல்வராக்குவதிலேயே உள்ளது. திரிணாமுல் காங்கிரசில் தற்போது சில முக்கிய தலைவர்கள் இல்லாமல் போயிருந்தால், மம்தா தனது மருமகனையே அடுத்த முதல்வராக அறிவித்திருப்பார். இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ளார்" என்றார்.
வளர்ச்சி பணிகள்
மேலும், மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களை மிக முக்கிய சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு உள்ளது என்றார். ஆனால், மம்தா பானர்ஜிக்கு பிரமருடன் அரசியல் செய்வதிலேயே முழு எண்ணம் உள்ளது என்று விமர்சித்தார். குறைந்தபட்சம் நேதாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குறைந்தபட்சம் அரசியல் செய்யாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.