எதாக இருந்தாலும்.. ஊர் கூடி தேர் இழுப்போம்.. நல்ல மாற்றம் வரும்.. ஸ்டாலின் அறிவிப்புக்கு மம்தா பதில்
கொல்கத்தா : எதுவாக இருந்தாலும் கூட்டணி கட்சிகளோடு இணைந்து முடிவு எடுத்தால் அனைவரும் ஏற்பர் என பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
வரும் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அணி திரண்டு வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் அவரது சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார். உடன் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.
அப்போது ஸ்டாலின் பேசுகையில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன். அவரால் மட்டுமே பிரதமர் மோடியின் பாசீச ஆட்சியை ஒழிக்க முடியும் என்று கூறினார். இது காங்கிரஸ் கட்சிக்கு சந்தோஷமாக இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டன.
மறுநாள்
மக்களவை தேர்தல் முடிந்த பிறகே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஸ்டாலின் செயல்பட்டுள்ளதால் மம்தா, மாயாவதி , சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை நிகழ்ச்சி நடந்த மறுநாளே பதிவு செய்துவிட்டது.
நேரம்
அக்கட்சி நிர்வாகிகள் கூறுகையில் பிரதமர் வேட்பாளரை ஒருவர் மட்டுமே முடிவு செய்யக் கூடாது. பிற கூட்டணியினருடன் சேர்ந்து விவாதித்து பிறகே தேர்வு செய்ய வேண்டும். மேலும் பிரதமர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதற்கான நேரம் இதுவல்ல என தெரிவித்துள்ளனர்.
கூட்டணிக்குள் சலசலப்பு
ஸ்டாலினின் அறிவிப்பு, கூட்டணி கட்சியினரிடம் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஸ்டாலினோ இதற்கு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அதில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவதற்கு சரியான முடிவாகும் என்று கூறியுள்ளார்.
சரியான நேரம் அல்ல
இந்நிலையில் பிரதமர் வேட்பாளர் குறித்த விவகாரம் குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் நான் மட்டுமில்லை. நாம் அனைவரும் சேர்ந்தே பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய வேண்டும். அதுவும் இப்போது பிரதமர் வேட்பாளர் தேர்வுக்கான நேரம் இதுவல்ல. இந்தியாவில் நல்ல மாற்றம் வரும் என நம்புவோமாக என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பெரிய கட்சி
பிரதமர் ஆகும் விருப்பம் எனக்கு துளியும் இல்லை. வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தனிபெரும் கட்சியாக உருவாக்குவதே லட்சியம் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்தார். இது போல் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த நிர்வாகி ப.சிதம்பரம் தெரிவித்தார். அது குறித்த முடிவை தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சியினருடன் கலந்து ஆலோசனை செய்தே எடுப்போம் என்றும் ப.சிதம்பரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.