நாட்டின் ஜனநாயகத்தை காக்க தன்னலமின்றி போராடுகிறார் மம்தா பானர்ஜி.. ராஜ் தாக்கரே கருத்து
கொல்கத்தா: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பான பிரச்சனையில் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை என ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சித் தலைவரான ராஜ் தாக்கரே வரும் அக்டோபரில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி வருகிறார்.
சமீபத்தில் டெல்லி சென்ற இவர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார். இந்நிலையில் மேற்குவங்கம் சென்ற ராஜ் தாக்கரே, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
அப்போது வரும் 9ம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிரக மும்பையில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே, நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக தன்னலமின்றி பாடுபட்டு வருகிறார் மம்தா.
தனது போராட்டம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு எதிரானது மட்டுமே, பிரதமர் மோடிக்கு எதிரானது அல்ல என்றார் ராஜ் தாக்கரே.உலகின் பல நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு முறை கைவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டும் ஏன் இன்னும் இந்த இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என வினவினார்.
எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும், என்பதே தங்களது கோரிக்கை என குறிப்பிட்டார். ராஜ் தாக்கரே மும்பையில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்பது பற்றி மம்தா பானர்ஜி உறுதி எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் தமது போராட்டத்திற்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என அவர்உறுதி கூறியுள்ளதாக தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக, நீதிமன்றம் செல்வீர்களா என ராஜ் தாக்கரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், இவ்விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் இவை உரிய நீதி வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.