ஆந்திராவில் ஒரு கவுசல்யா சம்பவம்.. மகளை வீட்டிலேயே கொன்று நாடகம்… தந்தை கைது
பிரகாசம்:ஆந்திர மாநிலத்தில் வேறு சாதியைச் சேர்ந்த தமது கல்லூரி நண்பரை காதலித்ததால், பெற்ற மகளை தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரகாசம் மாவட்டம், தாலூர் வட்டம், கோதபாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.வெங்கா ரெட்டி. அவரின் மகள் வைஷ்ணவி, ஓங்கோல்நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்தார். தான் படிக்கும் கல்லூரியில் வேறு சாதியை சேர்ந்த நண்பரை வைஷ்ணவி காதலித்துள்ளார்.
இருவரும் இரு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதைச் சமீபத்தில் அறிந்த வைஷ்ணவியின் தந்தை வெங்காரெட்டி கண்டித்துள்ளார். ஆனால் காதலை வைஷ்ணவி கைவிடவில்லை.
பெற்றோரின் நெருக்கடி அதிகரிக்கவே, சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி, கல்யாணம் செய்துகொண்டு மார்காபுரம் நகரில் ஒரு வீடு எடுத்து தமது காதலருடன் வசிக்க தொடங்கியுள்ளார். இதை அறிந்த வெங்கா ரெட்டி, மகள் வைஷ்ணவியை கண்டுபிடித்து, வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால், தந்தைக்கும், மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வைஷ்ணவி மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு வெங்கா ரெட்டி தகவல் அளித்துள்ளார்.சம்பவம் அறிந்த போலீசாருக்கு சந்தேகம் எழவே, கோதபாலம் கிராமத்துக்கு சென்றுள்ளனர்.
வைஷ்ணவியின் உடலையும் அவர்கள் பரிசோதனை செய்தனர்.அப்போது வைஷ்ணவியின் கழுத்தில் பலத்த காயமும், உடலில் காயமும் இருப்பதை கண்டுபிடித்தனர். உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
மேலும், தாலூர் போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மகளைக் கொலை செய்ததாக வெங்கா ரெட்டியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாசம் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 4 ஆணவக் கொலைச் சம்பவம் இதுவாகும், என்பது குறிப்பிடத்தக்கது.