வீட்டு நினைப்பில் விமானத்தின் கழிவறையில் பயணி செய்த காரியம்.. நடுவானில் திணறிய விமானம்!
விமானத்தில் புகைப்பிடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவா: நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அகமதாபாத்திலிருந்து கோவாவிற்கு இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் முழுவதும் சிகரெட் புகை பரவியது. அந்தப் புகை எங்கிருந்து வந்தது என விமான ஊழியர்கள் சோதனை செய்ததில், கழிவறையில் இருந்த பயணி ஒருவர் புகைப்பிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த பயணியிடம் இருந்த சிகரெட் அணைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக விமானிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் விமானம் தரையிறங்கியதும், இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், அந்தப் பயணியைக் கைது செய்தனர்.
சிலருக்கு கழிவறையில் சிகரெட் பிடிப்பது என்பது தினசரி வழக்கமான பழக்கம். இந்த நபரும் அதே போல் கழிவறையில் பழக்கதோஷத்தில் சிகரெட் பிடித்தாரா அல்லது வேறு ஏதேனும் தீய நோக்கத்தில் அவ்வாறு நடந்து கொண்டாரா என்பது குறித்து சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.