காஷ்மீரில் போலியோ சொட்டு மருந்தால் குழந்தை பலியானதாக பரவிய வதந்தியால் பெற்றோர் பதற்றம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், போலியோ சொட்டு மருந்தால் குழந்தைகள் பலியானதாக வதந்தி கிளம்பியது. இந்த வதந்தியை பரப்பிய 18 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.
போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாடு முழுவதும், ஜனவரி 17ம் தேதி நடைபெற்றது. இதன்பிறகும், விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டுவருகிறது.
ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து அளித்தபோது, காஷ்மீர் மாநிலத்தில், குழந்தைகள் இறந்ததாக, சோஷியல் மீடியா வழியாக விஷமிகள் வதந்தி பரப்பியுள்ளனர்.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, இந்த வதந்தி காட்டுத்தீ போல் பரவியதால் தங்கள் குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்த பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த வதந்தியை கிளப்பிய 12ம் வகுப்பு மாணவர் பர்வீஸ் அகமது ஷேக் என்பவரை கைது செய்தனர். இவர் தனது பேஸ்புக்கில் போலியோ சொட்டு மருந்தால் குழந்தை பலியாகியதாக கூறி பொய் தகவலை பரப்பியுள்ளார்.
ஒரு வேடிக்கைக்காக ஷேக் இந்த வதந்தியை கிளப்பியுள்ளதாக கூறியுள்ளபோதிலும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில், போலியோ சொட்டு மருந்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகள் சமீபத்தில் போலியோ முகாம்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், காஷ்மீரில் போலியோ மருந்துக்கு எதிராக இதுபோன்ற சோகம் நிகழ்ந்துள்ளது.