காதலை ஏற்க மறுத்த இளம்பெண்... அடித்து உதைத்த இளைஞன்.. அலுவலக வாசலில் நடந்த கொடூரம்
தனது காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இளைஞன் தாக்கிய கண்காணிப்புக் காமிரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உ.பி. மாநிலம் பிலிப்பிட் நகரில் அலுவலக வாயில் ஒன்றில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரு இளம் பெண்கள் பேசிக்கொண்டிருப்பதும் அவர்களில் ஒருவரை இளைஞன் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குவதும் கண்காணிப்புக் காமிராவில் பதிவாகியுள்ளது.
ஒரு நிமிடத்திற்கு மேலாக ஓடும் அந்தக் காட்சி பகல் நேரத்தில் பதிவாகியுள்ளது. முதலில் பேசுவதும் பின்னர் இளம்பெண்ணை தாக்குவதும் அதன் பின்னர் காலில் விழுந்து கெஞ்சுவதுமாக அந்த இளைஞன் இருந்திருக்கிறான்.
அப்போது அங்கு மற்றொரு வாகனத்தில் வந்த ஒரு பெண் அந்தப் பெண்ணை இளைஞனிடம் இருந்து மீட்டு அழைத்துச் சென்றார். அடித்த இளைஞன் மீது நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் அந்த இளைஞன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவனைத் தேடி வருகிறார்கள்.