நடத்தையில் சந்தேகம் - தமிழ்நாட்டில் செட்டிலாக கூப்பிட்டும் வர மறுத்த மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர்!
பெங்களூர்: தமிழ்நாட்டில் போய் செட்டிலாகலாம் என்று மனைவியைக் கூப்பிட்டார் கணவர். ஆனால் அவரோ நான் பெங்களூரை விட்டு வரவே மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் மனைவி மீது ஆசிட் ஊற்றி விட்டார். இப்போது முகம் கருகிய நிலையில் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கணவர் கைது செய்ய்பட்டுள்ளார்.
கிழக்கு பெங்களூர், வர்த்தூர் பகுதி, காந்தி சர்க்கிள் என்ற இடத்தில் வசித்து வருபவர் உல்பத் பானு. 27 வயதாகும் இவரது கணவர் பெயர் பைரோஸ். இவர் தமிழகத்தின் வாணியம்பாடியைச் சொந்த ஊராகக் கொண்டவர். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். வயது முறையே 11 மற்றும் 6 ஆகும். 12 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த இந்தத் தம்பதிக்குள் சந்தேகம் என்ற ரூபத்தில் சிக்கல் வர ஆரம்பித்தது. சமீபத்தில் துபாய்க்குப் போய் வேலை பார்த்தார் பைரோஸ். அங்கு போனதும், தனது மனைவி மீது அவருக்குச் சந்தேகம் வந்துள்ளது. சமீபத்தில்தான் துபாயிலிருந்து திரும்பினார்.
வந்ததும் மனைவியிடம் நடத்தையில் சந்தேகம் கொண்டு சண்டை பிடித்தார். இதனால் கோபமடைந்த உல்பத், தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார். இதையடுத்து அங்கு போன பைரோஸ், அங்கு மனைவி மற்றும் மனைவி குடும்பத்தாரிடம் சண்டை போட்டுள்ளார். அவர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். இதனால் திரும்பி விட்டார் பைரோஸ்.
அதன் பின்னர் சனிக்கிழமை மாலை உல்பத் வீட்டுக்கு வந்தார் பைரோஸ். வாணியம்பாடியில் தான் கட்டியுள்ள புது வீட்டில் போய் வாழலாம், என்று கூறி அவர் அழைத்துள்ளார். அதற்கு உல்பத், எனக்குத் தெரியாது, எனது வீட்டில் பேசுங்கள், அவர்கள் சொன்னால் நான் வருகிறேன் என்று கூறி விட்டார். இதனால் கோபத்துடன் வெளியேறியுள்ளார் பைரோஸ்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்துள்ளார். அப்போது தனது வீட்டையொட்டியுள்ள தனது மாமா அப்துல் காதர் என்பவர் நடத்தி வரும் காய்கறிக் கடையில் உட்கார்ந்திருந்தார் உல்பத். அங்கு வேகமாக சென்ற பைரோஸ், தனது கையில் வைத்திருந்த ஆசிடை எடுத்து உல்பத் மீது ஊற்றி விட்டார். இதில் அவர் முகம், கைகளில் ஆசிட் பட்டு கதறித் துடித்தார். அப்போது பைரோஸ் மீதும் ஆசிட் பட்டு அவரும் காயமடைந்தார்.
உடனடியாக உல்பத்தை வாணி விலாஸ் மருத்துவனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அவருக்கு 20 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உல்பத்தின் சகோதரர் சல்மான் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில், பைரோஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.