ஜார்க்கண்டில் பயங்கரம்: ஆசிரியையின் தலையை வெட்டி எடுத்து 5 கி.மீ. ஓடிய நபர்
ராஞ்சி: ஜார்க்கண்டில் பள்ளி ஆசிரியையின் தலையை வெட்டி அதை எடுத்துக் கொண்டு 5 கிலோமீட்டர் தூரம் ஓடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கெலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள கப்ரசாய் துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருந்தவர் சுக்ரா ஹெசா(30). நேற்று பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டபோது அங்கு வந்த ஹரி ஹெம்பிராம்(26) சுக்ராவை பிடித்து இழுத்துச் சென்றார்.
தனது வீட்டிற்கு அருகில் வந்த பிறகு தான் வைத்திருந்த வாளால் ஆசிரியையின் தலையை துண்டித்தார் ஹரி. அதன் பிறகு துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரியை தேடியபோது அவர் ஆசிரியையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சென்றது கண்டிபிடிக்கப்பட்டது.
ஹரி தனது கையில் 2 வாள்கள் வைத்திருந்ததால் பொதுமக்கள் அவர் அருகில் செல்ல அஞ்சினார்கள். போலீசார் ஹரியை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ரன்விஜய் சிங் கூறியதாவது,
ஹரி மனநலம் பாதிக்கப்பட்டவர். பள்ளிக்கு அருகே தனியாக வசித்து வருகிறார். அவர் ஆசிரியையை கொலை செய்ததும் பொதுமக்கள் அவர் மீது கல்லெறிந்தனர். இதையடுத்து அவர் துண்டிக்கப்பட்ட தலையுடன் காட்டுக்குள் சென்று புதரில் மறைந்து கொண்டார். அவரை கைது செய்த பிறகு மக்கள் அவரை தாக்கத் துவங்கினர். அவர்களிடம் இருந்து ஹரியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்றார்.