எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. ஆத்திரம் அடங்காத தந்தையே மகளை எரித்துக் கொன்ற கொடூரம்
மொரடாபாத்: எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மகளை தந்தையே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரேத மாநிலத்தில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத்தைச் சேர்ந்தவர் முஸ்ரப் ராஸா கான். இவரது மகள் குல்பாஷா பீ (22) அதே பகுதியைச் சேர்ந்த சஜீத் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார் குல்பாஷா பீ. திருமணமாகி இரண்டாண்டுகள் ஆன நிலையில் தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று அவர் வீட்டுக்கு ராஸா கான் வந்தார்.
அப்பா திடீரென்று வந்ததால் பதற்றமடைந்த குல்பாஷா பீ உட்கார்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்துள்ளார். அப்போது உடன் வந்திருந்த உறவினர்கள், குழந்தையை அவரிடமிருந்து பிரித்தனர். பின்னர் கட்டிலோடு சேர்த்து வலுக்கட்டாயமாக குல்பாஷாவை கட்டியுள்ளனர்.
பின்னர் தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்னையை அவர் மீது ஊற்றியுள்ளனர். தன்னை விட்டு விடும்படி எவ்வளவே கெஞ்சியும் குல்பாஷாவை அவர்கள் இரக்கமின்றி தீயை வைத்து கொளுத்திவிட்டு ஓடிவிட்டனர். கதறிய குல்பாஷாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர். இருப்பினும் குல்பாஷாவின் உடல் முழுவதும் வெந்து எரிந்தது.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சஜீத் அலி தந்தை கொடுத்த புகாரின் பேரில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெற்ற மகளை தந்தையே எரித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.