பினராயி விஜயனை நோக்கி கத்தியுடன் ஓடிய நபர்.. தக்க நேரத்தில் அசம்பாவிதம் தவிர்ப்பு.. பரபரப்பு
Recommended Video
டெல்லி: டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது கத்தியால் ஒரு நபர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்போது டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் தங்கி உள்ளார். இன்று காலை 10 மணிக்கு அங்கிருந்து அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக கிளம்பினார். அவரிடம் பேட்டி கேட்பதற்காக பத்திரிகையாளர்கள் அவரது அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்து நின்றிருந்தார். இதை கவனித்த சில பத்திரிக்கையாளர்கள் நீங்கள் யார் என்று கேள்வி எழுப்பினார். இதனால் உஷாரான அந்த நபர் தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு கேரள முதல்வர் அறை நோக்கி முன்னேறினார். இதை பார்த்த பத்திரிகையாளர்கள் எச்சரிக்கை குரல் எழுப்பினர்.
இதையடுத்து கேரள இல்லத்தில் உள்ள பாதுகாப்பு வீரர்கள் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து முதல்வரின் தனிப் பாதுகாவலர்கள் விரைந்து வந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கேரள முதல்வரின் பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து இதன் மூலம் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட அந்த நபர் பெயர் விமல்ராஜ் என்று தெரியவந்துள்ளது. ஆலப்புழா அருகே உள்ள செட்டிகுளங்கரா என்ற பகுதியை சேர்ந்தவர். இவர் ஏற்கெனவே திருவனந்தபுரத்தில் ஒருமுறை தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதும், தற்போது முதல்வர் முன்னிலையில் கத்தியால் குத்திக் தற்கொலை செய்யவே, அவர் முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலை வாய்ப்பு கேட்டு கையில் பல கோப்புகளை வைத்திருந்ததாகவும், லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவரை போல வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.