வீட்டுப் பாடத்தை சரியாக எழுதாத குழந்தை... வாயில் வெங்காயத்தை திணித்து கொன்ற கொடூர தந்தை !
ஔரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலத்தில் மனப்பாடப் பகுதியை சரியாக ஒப்பிக்காத 6 வயது மகளின் வாய்க்குள் வெங்காயத்தைத் திணித்துக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குட்டே (30). இவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது 6 வயது குழந்தை பாரதிக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுப்பாடம் எழுதச் சொல்லி தனது மகளை கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த குழந்தை சரியாக எழுதாததால் சஞ்சய்குட்டே ஆத்திரமடைந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து தண்டனை என்ற பெயரில் குழந்தைக்கு வெங்காயத்தை கொடுத்து விழுங்க சொல்லி அடித்துள்ளார் சஞ்சய் குட்டே. அடி தாங்காமல் குழந்தையும் வெங்காயத்தை விழுங்கியுள்ளது. அப்போது திடீரென பாரதி தொண்டைக்குள் வெங்காயம் சிக்கியதால் மூச்சு விட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தாள்.
சஞ்சய்யின் இந்தக் கொடூர செயலை கண்டு அவரது மனைவியும், 2 வயது மகனும் பயந்துபோய் வெளியில் சொல்லவில்லை. இந்த நிலையில் குழந்தை பாரதியின் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகில் உள்ள இடத்தில் சஞ்சய் குட்டே புதைத்துவிட்டார்.
பின்னர், பயத்தில் இருந்து மீண்ட சஞ்சய்யின் மனைவி தனது உறவினர்களின் உதவியுடன் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து புதைக்கப்பட்ட பாரதியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சய் குட்டேயை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.