பாசமாக காலை வருடிய நாய் குட்டி.. பிளேடை எடுத்து வெட்டி தள்ளிய கொடூரன்.. டெல்லியில் ஷாக் சம்பவம்
லேசான காயம் ஏற்படுத்திய நாய்குட்டியின் இரு கால்களை ஒருவர் பிளேடால் துண்டித்த கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி: தென்மேற்கு டெல்லியில் உள்ள துவாரகாவில் ஒருவரின் காலில் லேசான காயம் ஏற்படுத்திய நாய்குட்டியின் கால்களை பிளேடால் வெட்டி கொடுமைபடுத்திய நபர் மீது அந்த நகர போலீசார் விலங்குகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த வாரம் தெற்கு டெல்லியில் உள்ள பிரமோத் என்பவரது வீட்டில் நுழைந்த நாய்குட்டி அவரது காலை வருடி லேசான காயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரமோத் அந்த நாய்குட்டியின் இரண்டு கால்களை பிளேடை எடுத்து வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தென்மேற்கு டெல்லி துவாரகா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து பிரமோத் மீது விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தகவலை தென்மேற்கு டெல்லி காவல் துணை ஆணையர் சுரேந்தர்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நாய்குட்டி பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகக் கூட பிரமோத் காலை வருடி இருக்கலாம் என்றும், அந்த நாய்குட்டி கால்களை பிரமோத் வெட்டியது ஏற்புடைய செயல் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Punitive proceeding u/s 11 of PCA act has been initiated against the offender at PS Palam.https://t.co/HHgFENRhrT
— Surender Kumar (@surenderkr_ips) December 7, 2016
விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி அவற்றை கொல்லுதல், காயம் ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நாயின் கழுத்தில் இளைஞர் ஒருவர் காயப்படுத்திய வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்துமாறு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய வழக்கில் மருத்துவ மாணவர்கள் தண்டிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.