பத்மாவதி’ பட விவகாரம் : ஜெய்ப்பூர் கோட்டை அருகே தூக்கில் தொங்கி ஒருவர் தற்கொலை
’பத்மாவதி’ திரைப்படத்தை எதிர்த்து தூக்கிட்டு வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Recommended Video
ஜெய்ப்பூர் : 'பத்மாவதி' திரைப்படத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதிவைத்துவிட்டு ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் கோட்டை அருகே ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ராஜ்புத் இன ராணியான பத்மாவதி குறித்த வரலாற்று திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார். இதில் பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோன் நடித்து உள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், தொடர் போராட்டங்களால் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் ராஜ்புத் வம்சத்தினரை தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறி பா.ஜ.க, ராஜ்புத் கார்னி சேனா, ராஜ்புத் சேனா ஆகிய அமைப்புகள் வட மாநிலங்களில் தீவிரப்போராட்டம் நடத்தி வருகின்றன. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தத் திரைப்படம் தடைசெய்யப்பட்டுள்ளது. பன்சாலி, தீபிகா ஆகியோருக்கு தொடர்ந்து கொலைமிரட்டலும் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜெய்ப்பூர் அருகே உள்ள நகர்ஹர் கோட்டையில் தூக்கில் தொங்கிய நிலையில், ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் அருகே பாறையில் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராகவும், தடையிடக்கோரியும் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப்பாறையில், பத்மாவதி திரைப்படத்தை நாங்கள் எதிர்க்கிறோம்; படம் வெளியானால் உருவ பொம்மையை எரிக்கமாட்டோம். அதற்கு பதில் சம்பந்தப்பட்டவர்களை தூக்கில் தொங்க விடுவோம் என்று எழுதப்பட்டு இருந்தது. இதனால் அந்தப்பகுதியில் தற்போது பரபரப்பு நிலவி வருகிறது. இந்த தற்கொலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ராஜ்புத் கார்னி சேனா மறுப்பு தெரிவித்து உள்ளது.
இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த ஆதார் அட்டையின் மூலம் அவரது பெயர் சேத்தன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் யார், எங்கிருந்து வந்தார், எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து ஜெய்ப்பூர் நகர போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.