மருத்துவமனையில் வென்டிலேட்டரை கட் செய்து ஏர் கூலரை ஆன் செய்த குடும்பம் - உயிரிழந்த நோயாளி
கொரோனா கண்காணிப்பில் இருந்த நோயாளியுடன் இருந்த குடும்பத்தினர் ஏர் கூலரை பயன்படுத்துவதற்காக வெண்டிலேட்டரை கழற்றியதில் அந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோட்டா: கொரோனா பாதித்தவர்கள் நோய் பாதிப்பின் தீவிரத்தினால் உயிரிழப்பது வாடிக்கை ஆனால் ஒரு குடும்பத்தினரின் அஜாக்கிரதையால் அந்த நோயாளி மூச்சுதிணறி உயிரிழந்து விட்டார். வெயிலின் கொடுமையால் ஏர்கூலரை பயன்படுத்துவதற்காக வெண்டிலேட்டரை துண்டித்த குடும்பத்தினரால் ஒரு நோயாளியின் உயிரை அநியாயமாக காவு வாங்கியுள்ளது.
மரணமடைந்த அந்த நோயாளி ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் மகாராவ் பீம் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 13ஆம் தேதி கொரோனா நோய் தொற்றினால் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அடுத்தடுத்து செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் ரிசல்ட் நெகட்டிவ் எனவும் வந்துள்ளது. அங்கிருந்த இன்னொருவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வரவே, இதனையடுத்து அந்த நோயாளியை கண்காணிப்பு வார்டுக்கு மாற்றியுள்ளனர். அந்த நோயாளியின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்துள்ளனர்.
ராஜஸ்தானில் தற்போது வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. மருத்துவமனையின் வார்டினுள் வெப்பம் அதிகரிக்கவே ஏர் கூலர் ஒன்றினை அந்த குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். அந்த ஏர்கூலரை சொருகுவதற்கு பிளக்பாயின்ட் இல்லை என்ன செய்வது என்று யோசித்த அவர்கள் வெண்டிலேட்டரை சொருகியிருந்த வயரை கழற்றிவிட்டு ஏர்கூலரை சொருகினர்.
நோயாளியை கண்காணித்து வந்த வென்டிலேட்டர் கருவி துண்டிக்கப்பட்டதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
வெண்டிலேட்டருக்கு மின்சாரம் கிடைக்காமல் போகவே அந்த நோயாளி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர், நர்சிங் கண்காணிப்பாளர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி அடங்கிய குழு இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த குழுவினர் தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நவீன் சக்சேனா தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு.. மக்களை கஷ்டப்படுத்த கிடையாது.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
ஏர்கூலரை கொண்டு வந்து வார்ட்டில் பயன்படுத்துவதற்கு நோயாளியின் குடும்பத்தினர் எந்த அனுமதியும் பெறவில்லை என்றும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வெண்டிலேட்டரை கட் செய்து விட்டு செல்போன் சார்ஜரை போட்ட மருத்துவமனை ஊழியர் பற்றி பல மீம்ஸ்கள் வந்துள்ளன. காமெடிக்காக சித்தரிக்கப்பட்ட அந்த வீடியோ சம்பவம் போல இப்போது ஏர்கூலரை போடுவதற்காக வெண்டிலேட்டரை கட் செய்து நோயாளியின் உயிரை அவரது குடும்பத்தினரே காவு வாங்கியுள்ளனர் என்பதுதான் சோகம்.