லேப்டாப்பை சார்ஜ் போட்டுக் கொண்டே பயன்படுத்திய புதுமாப்பிள்ளை ஷாக் அடித்து பலி
டெல்லி: டெல்லியில் லேப்டாப்பை சார்ஜ் போட்டுக் கொண்டே பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை ஒருவர் பலியாகியுள்ளார்.
தென்கிழக்கு டெல்லியின் துக்லகாபாத் பகுதியை சேர்ந்தவர் ப்ரிஜேஷ் குமார்(23). பரீதாபாத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடைபெற்றது.
அவர் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் நேற்று தனது வீட்டில் லேப்டாப்பை சார்ஜ் போட்டுக் கொண்டே பயன்படுத்தியுள்ளார். திடீர் என்று மின்சாரம் தாக்கி அவர் மயக்கம் அடைந்தார்.
உடனே அவரது உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் குமாரின் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்ததில் அவர் மின்சாரம் தாக்கி பலியானது உறுதியாகியுள்ளது. அவரது மனைவி அதிர்ச்சியில் இருப்பதால் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற முடியவில்லை என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.