ம.பி.யில் ஒரு பாவப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’.. திருமணவீட்டில் இளைஞருக்கு நேர்ந்த அவமானத்தை பாருங்கள்
ஒரு கும்பல் இளைஞரை மூக்கால் செருப்பை துடைக்க வைக்கும் வீடியோ அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
போபால்: மத்தியப் பிரதேசத்தில் கும்பல் ஒன்று, இளைஞர் ஒருவரை மூக்கால் காலணியை துடைக்க வைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்ட்சர் மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்று திருமணம் ஒன்று நடைபெற்றது. அப்போது இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், இளைஞர் ஒருவரை அவரது மூக்கால், அங்கிருந்தவர்களின் காலணிகளை துடைக்க சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். தற்போது அந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்த இளைஞரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த இளைஞர் அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்த இளைஞரைத் தேடும் பணியையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
#WATCH Madhya Pradesh: Man forced to rub nose on shoes of people who allegedly beat him after an argument broke out between them during a marriage ceremony, in Mandsaur on 16 June. The victim has been missing since the incident. pic.twitter.com/1pOYZ6J2D3
— ANI (@ANI) June 22, 2019
எதற்காக அந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க சொல்லி கொடுமை படுத்தினர் என்பது குறித்த தெளிவான தகவலகள் இல்லை. வீடியோ காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்திலும், இதே போல் திருமணத்திற்கு வரும் இளைஞரை, அங்கிருந்தவர்கள் மோசமாக அவமானப்படுத்துவர். அதேபோல், தற்போது மத்திய பிரதேசத்திலும் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.