ஏடிஎம் காவலர் வயிற்றில் பாய்ந்த 300 தோட்டாக்கள்.. காஷ்மீரில் பயங்கர கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏடிஎம் காவலாளி ஒருவர் வயிற்றில் 300 தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு ஜாஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணி புரிந்து வந்தவர் அகமது ஷா என்ற 20 வயது இளைஞர். நேற்றிரவு வழக்கம் போல் பணிக்குச் சென்ற அகமது, ஏடிஎம் மையத்திலேயே வயிற்றில் காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். மர்மநபர்கள் அவரை வயிற்றில் கத்தியால் குத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 300 தோட்டாக்கள் பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தகவல், ரியாஸின் குடும்பத்தினர் உள்பட பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளை முயற்சியில் தீவிரவாதிகள் அகமதுவை கொன்றிருக்கலாம் என்பது பாதுகாப்பு படையினரின் கருத்து. ஆனால், பாதுகாப்புப் படையினரே ரியாஸை கொடூரமாக சுட்டுக் கொன்றுவிட்டு, நாடகம் ஆடுகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அகமதுவின் இறுதிச் சடங்கில் ஏராளமான பொதுமக்கள் துக்கத்துடன் பங்கேற்றனர்.
தொடர்ந்து இந்த துயரச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.