செல்போனிற்கு பதில் பார்சலில் வந்த ‘சோப்பு’.. கோபத்தில் போஸ்ட்மாஸ்டர் விரலைக் கடித்த நபர் கைது!
போஸ்ட்மாஸ்டரின் விரலைக் கடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த மொபைல் போனிற்கு பதில், துணி துவைக்கும் சோப்பு பார்சலில் வந்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், போஸ்ட் மாஸ்டரின் விரலைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டிவி கேபிள் ஆபரேடர் முகமது அஃப்ரதுல், சமீபத்தில் தன் மகனுக்காக சுமார் ரூ. 3,500 மதிப்புள்ள செல்போன் ஒன்றை இணையதளம் மூலமாக ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் அவரது வீடு இருந்த பகுதிக்கு செல்போனை டெலிவரி செய்யும் சேவை இல்லை என அந்த இணையதளம் கூறியுள்ளது. இதனால், அருகில் இருந்த போஸ்ட் ஆபீஸ் முகவரியை அனுப்பி, அங்கு செல்போன் பார்சலை அனுப்ப அவர் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, போஸ்ட ஆபிசுக்கு வந்த பார்சலை, போஸ்ட் மாஸ்டர் கிஷோரி மோகன் தாஸ் என்பவர் கொண்டு வந்து அஃரப்துலிடம் கொடுத்துள்ளார். பார்சலுக்கான பணமாக ரூ. 3,500 மற்றும் டெலிவரி சார்ஜ் ரூ. 98 சேர்த்து மொத்தம் ரூ. 3598 அஃரப்துலிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டார்.
அதிக ஆர்வத்தினால் போஸ்ட் மாஸ்டர் அங்கிருக்கும்போதே அப்பார்சலைப் பிரித்துப் பார்த்துள்ளார் அஃரப்துல். ஆனால், அதில் தான் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதில் ரூ. 5 பெறுமானமுள்ள துணி துவைக்கும் சோப்பு இருக்கவே அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் கோபமடைந்த அவர், தனது பணத்தை திரும்பத் தரும்படி போஸ்ட் மாஸ்டரிடம் சண்டை போட்டுள்ளார்.
போஸ்ட் மாஸ்டரோ, 'இது சம்பந்தப்பட்ட பார்சலுக்கான பணம், எனவே இதனைத் திருப்பித் தர இயலாது. நீங்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட இணையதளத்தை தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார். ஆனால், ஏமாற்றத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தால் போஸ்ட் மாஸ்டரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவரைத் தாக்க முயற்சித்துள்ளார் அஃரப்துல்.
அவரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்த போஸ்ட் மாஸ்டரின் விரல்களை கடித்துள்ளார். போஸ்ட் மாஸ்டரின் பணப்பையையும் பிடுங்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அஃரப்துலிடம் இருந்து போஸ்ட் மாஸ்டரைக் காப்பாற்றி, இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார், அஃரப்துலைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அந்த செல்போனை தன் மகனுக்காக ஆர்டர் செய்ததாகவும், செல்போன் இல்லாததால் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரமடைந்ததாகவும் போலீசாரிடம் அஃப்ரதுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி போலீசார் , சம்மந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.