வாஷிங் மெஷினில் பதுக்கியிருந்த திருடன்... 14 ஆண்டாக டிமிக்கி கொடுத்தவர்... மும்பையில் பரபரப்பு
மும்பையில் 14 ஆண்டுகளாக தப்பிய திருடன் வாஷிங் மெஷினில் பதுக்கியிருந்தபோது பிடிபட்டார்.
மும்பை: பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வாஷிங் மெஷினில் மறைந்திருந்த போது போலீஸிடம் பிடிபட்டார்.
மும்பையை சேர்ந்த திவாரி, கடந்த 2002-ஆம் ஆண்டு புனேவை சேர்ந்த 3 பேரை முதுநிலை கல்வியில் சேர்த்துவிடுவதாக உறுதிஅளித்துவிட்டு கோடிக்கணக்கான பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டார்.
அவர் மீது புனேவில் ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவரை போலீஸார் தேடி வந்தனர். அவர் கிடைக்காததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
3 அறைகள் கொண்ட வீடு
இந்நிலையில் அவரை தேடும் பணியில் மும்பை போலீஸார் ஈடுபட்டனர். அப்போது திவாரி ஒரு பெரிய அபார்ட்மென்ட்டில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மும்பையில் இருந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 3 அறைகளை கொண்ட வீட்டுக்கு போலீஸார் சென்றனர்.
போலீஸார் சந்தேகம்
அப்போது அங்கிருந்த திவாரியின் மனைவி, போலீஸாரை 3 மணி நேரமாக வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.மாறாக அவர் வீட்டுக்குள் இல்லை என்றே கூறிவந்தார். இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மறு முறை தேடல்
எனினும் திவாரியின் மனைவியின் அனுமதியை மீறி போலீஸார் வீடு முழுவதும் தேடினர். ஆனால் திவாரி கிடைக்கவில்லை. அப்போது ஒரு போலீஸ் அதிகாரிக்கு மட்டும் திவாரி நிச்சயம் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும், எனவே இன்னொரு முறை தேடினால் உண்மை விளங்கும் என்று நினைத்தார்.
அழுக்கு மூட்டைக்குள்...
அதன்படி மீண்டும் ஒரு முறை 3 அறை கொண்ட அந்த வீட்டை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது எல்லா பொருட்களும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது. ஆனால் வாஷிங் மெஷின் மட்டும் நகர்வது போல் தெரிகிறது. இதையும் விட்டு வைக்கக் கூடாது என்று நினைத்த போலீஸார், உடனடியாக வாஷிங் மெஷினை திறந்து பார்த்தனர். அப்போது அதில் துணிகள் கிடந்தன.
திவாரி மனைவி மீதும் வழக்கு
அவற்றை நீக்கிவிட்டு பார்த்தபோது என்ன ஆச்சரியம், திவாரி அந்த மெஷினுக்குள் இருந்தார். குறுகிய இடத்தில் உட்கார முடியாததால் திவாரி தனது உடம்பை நெளித்தபோது வாஷிங் மெஷினும் நகர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது திவாரிக்கு 54 வயதாகிறது. இதையடுத்து போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக திவாரியின் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.