சந்தேகப்பேயின் கொடூர செயல் - மனைவி குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்த குடிகாரன்
மனைவியில் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தனது மனைவியையும் மூன்று குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளான். காசியாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
காசியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடிகாரன் ஒருவன் சந்தேக புத்தியால் மனைவி மற்றும் பிஞ்சு குழந்தைகளைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடித்து குடித்து மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த குடிகாரனின் பெயர் பிரதீப் என்பதாகும். வேலைக்கு போகாமல் முழு நேர குடிகாரனாக இருந்த அவனுக்கு வீட்டிலேயே அடைந்து கிடைப்பதுதான் வேலை. சந்தேக புத்தி வேறு படுத்தி எடுத்தது. மனைவி மூன்று குழந்தைகள் இருந்தும் மனதே ஒட்டவில்லை.
தனது மனைவிக்கு வேறு ஒருவனுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் மனதை குடைந்து கொண்டிருந்தது. அடிக்கடி மனைவியோடு சண்டை போட்டான். ஆனாலும் சண்டை ஓயவில்லை. என்ன செய்வது என்று யோசித்து யோசித்து கடைசியில் கொலை செய்வது என்று முடிவு செய்தான். புதன்கிழமையன்று இரவு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்தான். நால்வரின் வாயிலும் துணியை கட்டி சத்தம் கேட்காத அளவிற்கு கொடூரமான முறையில் நடந்து கொண்டான். கடைசியில் தானும் தற்கொலை செய்து கொண்டான்.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்தபோது பிரதீப்பும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்திருந்தனர். அவரது மனைவியும் மற்றொரு குழந்தையும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர்களும் உயிரிழந்து விட்டனர்.
தற்கொலைக்கு முன்பாக பிரதீப் தான் கொலை செய்த காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தன் மனைவி குழந்தைக்கு விஷம் கொடுத்ததாகவும் அவர்கள் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவர்கள் வாயை துணி வைத்து கட்டி கொலை செய்த்தாகவும் தெரிவித்திருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஜியாபாத்தின் மூத்த போலீஸ் எஸ்பி சுனித் குமார் சிங் இந்த கொலை சம்பவம் பற்றிய தகவலை ட்விட்டரில் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடிகாரனின் சந்தேகம் ஒரு குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது.