எப்போதும் போனும் கையுமாக இருந்த மனைவி.. தலையணையால் அழுத்தி கொலை செய்த கணவன்.. பெங்களூரில் பரபரப்பு
பெங்களூர்: எப்போது பார்த்தாலும் போனிலேயே பேசிக்கொண்டிருந்ததால் கோபமடைந்த கணவர், தனது மனைவியை தலையணையை வைத்து முகத்தை மூடி கொலை செய்த, கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் பட்ரக் நகரை சேர்ந்தவர் கைலாஷ் சந்திரா (28). இவரது மனைவி, மாலதி சாஹு (23). இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கைலாஷ் தனது குடும்பத்தோடு, பெங்களூர் காமாட்சிபாளையா பகுதியில் வசித்து வந்தார்.
குழந்தை அழுகுரல்
இந்த நிலையில், கடந்த 19ம் தேதி, மாலதி கொலை செய்யப்பட்டார். வீட்டுக்குள் இருந்து குழந்தை அழுகுரல் தொடர்ந்து கேட்டதால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகத்தின்பேரில், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இந்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
சதாகாலம் போன்
இதையடுத்து தலைமறைவாக இருந்த கைலாஷ் சந்திராவை போலீசார் தனிப்படை அமைத்து தேடினர். ஒடிசாவில் அவரை போலீசார் கைது செய்தனர். கைலாஷிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மாலதி சதாகாலம், போனில் தனது உறவினர், தோழிகளுடன் பேசி வந்ததாகவும், மகளை கூட கவனிக்கவில்லை என்றும், தனக்கு தெரியகூடாது என வீட்டை விட்டு வெளியே நின்று பேசியதாகவும், இதையெல்லாம், பார்த்து தனக்கு மாலதி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும் இதை கண்டித்ததாகவும் கைலாஷ் தெரிவித்தார்.
பணம் அனுப்புவது பிடிக்கவில்லை
மேலும், தனது பெற்றோர் மற்றும் சகோதரிக்கு பணம் அனுப்புவதை மாலதி தடுக்க முயன்றதாகவும், அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் தன்னுடன் தகராறு செய்ததாகவும், சம்பவத்தன்று, தனது குடும்பத்தாருக்கு பணம் அனுப்ப இருந்ததாகவும், அந்த பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு மாலதி தர மறுத்ததாகவும், இதனால் கோபத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார் கைலாஷ்.
தலையணை
கோபத்தின் உச்சியில் இருந்த கைலாஷ், மாலதி முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார். இது இயற்கையான மரணம் என்பதை போல பிறர் நினைப்பார்கள் என கைலாஷ் கணக்கு போட்டுள்ளார். இதையடுத்து, வீட்டு கதவை வெளியே பூட்டிவிட்டு வெளியேறியுள்ளார். ஆனால், போலீசில் சிக்கிக்கொண்டார்.