குடும்ப தகராறு... போலீஸ் ஸ்டேசனில் பஞ்சாயத்து - மனைவிக்கு நேர்ந்த விபரீத முடிவு
குடும்பத்தகராறு போலீஸ் ஸ்டேசன் வரை வந்தும் தீர்வு காண முடியாமல் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. கட்டிய கணவனே மனைவி, மகனை கத்தியால் குத்தியதோடு கொழுந்தியாளையும் குத்தியுள்ளார்.
லூதியானா: முதல் கணவரின் மகன், மகளுடன் பேசிய மனைவியை காவல் நிலையத்தின் முன்பு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் இரண்டாவது கணவர். ரத்த வெறி அடங்காத நிலையில் மகன், கொழுந்தியாளையும் கத்தியால் குத்தி விட்டு தலைமறைவாகிவிட்டார். குடும்பத்தகராறு போலீஸ் ஸ்டேசன் வரை வந்தும் தீர்வு காண முடியாமல் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.
கொலையான பெண்ணின் பெயர் சுரீந்தர் கவுர் என்பதாகும். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். கணவர் இறந்து விடவே, குர்சரண் சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான பின்னரும் முதல் கணவருக்கு பிறந்த மகன், மகளுடன் சுரீந்தர் கவுர் பேசுவதையோ, உறவு கொண்டாடுவதையோ குர்சரண் விரும்பவில்லை. தினம் தினம் சண்டை போட்டார் குர்சரண்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைத்த சுரீந்தர் கவுர், போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றார். திங்கட்கிழமையன்று அனைவரையும் போலீஸ் டேசனுக்கு காவல்துறையினர் வரவழைத்தனர். பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே போனது. இருவருமே சமாதானமடையாத நிலையில் மீண்டும் ஜூலை 15ஆம் தேதி பேச வாருங்கள் முடிவெடுப்போம் என்று போலீசார் சொல்லி அனுப்பி வைத்தனர்.
பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாமலேயே தனது மகன் ஹர்ஷ்தீப் மற்றும் சகோதரி லக்விந்தர் கவுருடன் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்து காரில் ஏறப்போனார் சுரீந்தர் கவுர். தனக்கு ஒத்து வராத மனைவி தேவையில்லை என்று நினைத்த குர்ச்சணர் தன்னிடம் இருந்த கூர்மையான கத்தியால் மூவரையும் சராமாரியாக குத்தி கிழித்தார். இதில் மூவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். சம்பவ இடத்திலேயே சுரீந்தர் கவுர் உயிரிழந்தார். அவரது மகனும் சகோதரியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூவரையும் குத்திய குர்சரண் தலைமறைவாகி விட்டார். கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் குர்சரணை தேடி வருகின்றனர்.
மனைவியை கொலை செய்த குர்ச்சரன் இன்னும் கைது செய்யப்படவில்லை இந்த விவ காரத்தில் விரைவான நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்துள்ளனர்.