விவகாரத்து கேட்ட மனைவி கோர்ட்டில் வீச்சரிவாளால் வெட்டிக் கொலை- கணவன் கைது
விவாகரத்து கோரிய மனைவியை ஒடிஸா நீதிமன்றத்தில் வைத்து துரத்தி சென்று வாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
சம்பல்பூர்: கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் விவாகரத்து கோரிய மனைவியை ஒடிஸா நீதிமன்றத்தில் வைத்து வெட்டி கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
பீகார் மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தூர்பங் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (24). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சஞ்ஜிதா சவுத்ரி (18) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 4 மாத திருமண வாழ்வில் ரமேஷின் தொல்லை தாங்க முடியாததால் சஞ்ஜிதா மீண்டும் தாய் வீட்டுக்கே சென்று விட்டார்.
மனுதாக்கல்
இதையடுத்து கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி ஒடிஸா குடும்ப நல நீதிமன்றத்தில் சஞ்ஜிதா மனுதாக்கல் செய்துள்ளார். எனினும் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக ரமேஷ் குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சஞ்ஜிதாவை கொல்ல திட்டம்
இதற்கு சஞ்ஜிதா உடன்படவில்லை. இதனால் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு வரும் சஞ்ஜிதாவை கொலை செய்ய ரமேஷ்குமார் திட்டமிட்டார். அதன்படி நேற்றைய தினம் ஒடிஸா நீதிமன்றத்துக்கு சஞ்ஜிதாவும், அவரது தாய் லலிதா சவுத்ரி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
சஞ்ஜிதா மறுப்பு
இந்நிலையில் சஞ்ஜிதாவை பார்த்த ரமேஷ்குமார் தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்தார். இதை கண்ட சஞ்ஜிதா நீதிமன்ற வளாகத்துக்குள் ஓடினார்.
தாய் காயம்
அவரை விடாமல் துரத்திய ரமேஷ் அவரை பிடித்து கடுமையாக தாக்கி வாளால் வெட்டினார். இதை தடுக்க சென்ற லலிதா சவுத்ரிக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சஞ்ஜிதாவை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து ரமேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.