கள்ளக்காதலனுடன் காதலர் தினம் கொண்டாடிய மனைவியை அடித்துக் கொன்ற கணவன்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து காதலர் தினம் கொண்டாடிய மனைவியை கணவர் அடித்துக் கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ளது அய்தால்பூர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம் சிங். அவரது மனைவி கிருஷ்ணா(26). கிருஷ்ணாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் காதலர் தினமான நேற்று தனது கள்ளக் காதலனை சந்தித்துள்ளார். இதை பார்த்த விக்ரம் சிங் கிருஷ்ணாவை அதே இடத்தில் அடித்து நொறுக்கினார். இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து விக்ரம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்ரம் சிங்கை தேடி வருகிறார்கள்.