வறட்சியால் விபரீதம்.. குடிநீர் சண்டை கொலையில் முடிந்தது
பெங்களூர்: குடி தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடகாவில் தற்போது கடும் வறட்சி நிலவிவருகிறது. இதேபோல கோலார் மாவட்டத்தின், சிங்ககொண்டனஹள்ளி கிராமத்திலும் குடிநீருக்கு பஞ்சம் நிலவுகிறது. நேற்று இரவு தெருக்குழாயில் பெண்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தபோது, இரு பெண்கள் நடுவே தண்ணீர் குடத்தை வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இரு குடும்பத்து ஆண்களும் தலையிடும் அளவுக்கு மோதல் முற்றியது. ஒருகட்டத்தில் இரு குடும்பத்து ஆண்களும் அரிவாள், கத்தியால் தாக்கிக்கொண்டனர். இதில் வெங்கடேசப்பா (45) மற்றும் அவரது மகன் நஞ்சுண்டப்பா ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி வெங்கடேசப்பா இன்று மரணமடைந்தார். நஞ்சுண்டப்பா நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குடிநீர் தட்டுப்பாடு கொலைக்கு காரணமாகியுள்ள சம்பவம் கோலார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.