டெல்லி: டிராபிக் சிக்னலில் செக்ஸ் தொந்தரவு நபரை கொத்தாக அள்ளிய போலீஸ்
டெல்லி: போக்குவரத்து சிக்னலில் தவறான சைகைக் காட்டி பாலியல் தொந்தரவு செய்த வாலிபரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு போலீசாரிடம் சிக்க வைத்துள்ளார் இளம்பெண். அந்த நபரை கைது செய்த போலீசார் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி அகர்வால் திலக் நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று இரவு போக்குவரத்து சிக்னலில் பைக்கில் நின்றிருந்த இளம்பெண்ணை மற்றொரு பைக்கில் வந்த வாலிபர் ஆபாசமாகப் பேசியும் கிண்டலடித்தும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
கையால் அசிங்கமாக சைகை காட்டிய அவனை அமைதியாக போட்டோ பிடித்த இளம்பெண் அதனை தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். உடனே ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் கண்டனம் தெரிவித்தனர். இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் டெல்லி போலீசார் அவன் மீது வழக்குப்பதிவு அவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை அந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ஜெஸிலின் கவுர் என தெரியவந்தது. அப்பெண்ணை தொந்தரவு செய்து கிண்டலடித்த வாலிபர் பெயர் சரப்ஜித் என்ற ஹோனி என தெரியவந்தது. அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.